கள்ளக்குறிச்சி மருத்துவ மாணவி சரண்யாவின் உடல் நாளை மறுபிரேத பரிசோதனை
சென்னை: கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை நாளை மறுபிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் கடந்த மாதம் 23-ந் தேதி கிணறு ஒன்றில் பிணமாக மிதந்தனர்.
இதுகுறித்து உள்ளூர் போலீசார் சந்தேக சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
மர்மமான முறையில் இறந்த மாணவிகளில் ஒருவரான மோனிஷாவின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கு அவரது தந்தை தமிழரசன் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் தன் மகளின் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவளது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா, மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். இதன்படி, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மோனிஷாவின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே மற்றொரு மாணவி சரண்யாவின் தந்தை ஏழுமலை தன் மகளின் சாவில் மர்மம் உள்ளது. எனவே, தன் மகளின் உடலை மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிடவேண்டும்' என்று கூறி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.மாலா விசாரித்தார். உடலை அடக்கம் செய்து 15 நாட்களுக்கு மேலாகி விட்டதால், இனி மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏழுமலை மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், தன் மகளின் சாவில் மர்மம் உள்ளது என்று மனுதாரர் கூறுகிறார். மறு பிரேத பரிசோதனை கேட்கிறார். இதற்கு அரசு தரப்பில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? எனக் கூறி மறுபிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து சரண்யாவின் உடலை நாளை மறுபிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்துள்ளது.