ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகளை மாற்றும் முடிவு தற்காலிகமானதே... தெற்கு ரயில்வே விளக்கம்
சென்னை: ரயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகளை முற்றிலும் நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என தெற்கு ரயில்வே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2ம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து, மூன்றாம் வகுப்பு ஏ.சி., பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ரயில்வே துறையை நவீனப்படுத்தவும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ள இந்தியன் ரயில்வே நிர்வாகம், அதற்குத் தேவையான நிதியை பயணிகளின் டிக்கெட் வாயிலாக பெற இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால், ஊடகங்களில் வெளியான இச்செய்தியை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.
2ம் வகுப்பு பெட்டிகள் மாற்றம்...
எர்ணாகுளம்-நிஜாமுதீன் (டெல்லி) மங்களா எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்:12617) எஸ்-2 என்ற படுக்கை வசதி கொண்ட 2 ஆம் வகுப்பு பெட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பி-4 என்ற 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.
அதிகக் கட்டணம்...
இதன் மூலம் அந்த ரயிலில் 2 ஆம் வகுப்பு பெட்டிகள் 10 ஆக குறைந்துள்ளது. அதாவது, 2 ஆம் வகுப்பு படுக்கைக்கான 72 டிக்கெட்டுகள், ஏ.சி. கட்டணத்துக்கு மாறிவிட்டது. இந்த ரயிலில் எர்ணாகுளத்தில் இருந்து டெல்லிக்கு 2 ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் ரூ.925. ஆனால், மூன்றடுக்கு ஏ.சி. கட்டணம் ரூ.2,370 என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற ரயில்களிலும்...
அதேபோல, சென்னை எழும்பூர்-மங்களூர் சென்டிரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16859) ரயிலில் எஸ்-7 என்ற 2 ஆம் வகுப்பு பெட்டி ஞாயிற்றுக்கிழமையும், மங்களூர் சென்டிரல்-சென்னை எழும்பூர் (வண்டி எண்:16860) எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-9 என்ற 2 ஆம் வகுப்பு பெட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதலும் நீக்கப்படுகிறது. இதற்கு பதிலாக இரு மார்க்கங்களிலும் டி-4 என்ற ஏ.சி.சேர்கார் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
5 அல்லது 6 ஆண்டுகளில்...
மேலும், பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே டிவிஷனில் 2 ஆம் வகுப்பு பெட்டி தயாரிக்க அனுமதி தரப்படவில்லை எனவும் தகவல் வெளியானது. இதன் மூலம், படிப்படியாக 2ம் வகுப்பு படுக்கை பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப் பட்டு, இன்னும் 5 அல்லது 6 வருடங்களில் முற்றிலுமாக அவை நீக்கப் பட்டு விடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பாதிப்பு...
ரயில்வே நிர்வாகம் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டால் அது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு அதிக பாதிப்பாக அமையும் எனக் கண்டனக் குரல்கள் எழுந்தன.
விளக்கம்...
இந்நிலையில், 2ம் வகுப்பு பெட்டிகளை குறைக்கும் முடிவு தற்காலிகமானது தான், நிரந்தரமானதல்ல என தென்னிந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
பற்றாக்குறை தான் காரணம்...
மேலும், 2ம் வகுப்பு பெட்டிகள் பற்றாக்குறை காரணமாகவே, சில ரயில்களில் மட்டும் மூன்றாம் வகுப்பு ஏ.சி., பெட்டிகளாக மாற்றப்படுவதாகவும், அவை மீண்டும் 2ம் வகுப்பு பெட்டிகளாக மாற்றப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.