அமைச்சர் பதவியில் இருந்து 2வது முறையாக டிஸ்மிஸ் செய்யப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி!
சென்னை: நெல்லை மாவட்ட வேளாண்துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதற்கு அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தியே காரணம் என்ற புகார் எழுந்துள்ளதை அடுத்து கட்சிப்பதவியையும், அமைச்சர் பதவியையும் பறிகொடுத்துள்ளார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வரான பின்னர் முதல்முறையாக அமைச்சர் பதவியை இழந்துள்ளார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது அமைச்சர்பதவியை இழப்பது இது இரண்டாவது முறையாகும்.
உணவுத்துறை அமைச்சர்
அ.தி.மு.க.,வை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 2011 சட்டசபை தேர்தலில், கலசபாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; உணவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மாறிய துறைகள்
கடந்த, 2012 ஜனவரி, 4ஆம் தேதி, வணிக வரித்துறை அமைச்சரானார். அடுத்த, 14 நாட்களில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரானார்.
பதவியிழப்பு
அமைச்சரவையில் துறை மாற்றம் நடந்த, எட்டாவது நாளில், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
வேளாண்துறை அமைச்சர்
மீண்டும் நீண்ட காத்திருப்புக்கு பின், லோக்சபா தேர்தல் முடிந்ததும், 2014 மே, 19ஆம் தேதி, வேளாண் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தற்கொலை விவகாரம்
வேளாண்மைத்துறையில், 4 ஓட்டுநர்கள் நியமனத்திற்கு ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொல்லை கொடுத்ததால், நெல்லை மாவட்ட வேளாண்துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார் என்று புகார் கூறப்பட்டது.
இரண்டாம் முறை டிஸ்மிஸ்
தற்போது, வேளாண் அதிகாரி தற்கொலை உட்பட பல்வேறு காரணங்களால், கட்சிப்பதவியையும் அமைச்சர் பதவியை இழந்துள்ளார்.
ராவணன் ஆதரவாளர்
அக்ரி கிருஷ்ண மூர்த்தி சசிகலா உறவினர் ராவணனின் ஆதரவாளர். போயஸ் கார்டனில் இருந்து, சசிகலா வெளியேற்றப்பட்டபோது, அமைச்சர் பதவியை இழந்தார். மீண்டும் சசிகலா கார்டன் வந்ததும், அமைச்சர் பதவி கிடைத்தது. தற்போது, பிரச்னையில் சிக்கியதால், அமைச்சர் பதவியை இழந்துள்ளார்.