ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது சட்டவிரோதம்.. திமுக குற்றச்சாட்டுகளுக்கு பண்ரூட்டி ராமச்சந்திரன் பதில்
ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது சட்டவிரோதம் என்று திமுக வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக மூத்த தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.
சென்னை: கடந்த 18ம் தேதி சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த திமுக கோரியது தவறு என்று அதிமுக மூத்த தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.
கடந்த 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. இதனை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரின. இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து, சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைத்து திமுக உறுப்பினர்களும் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டார்கள். திமுக நடந்து கொண்டது தவறான செயல் என்று பண்ரூட்டி ராமச்சந்திரன் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
சட்ட விரோதம்
சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது சட்டத்திற்கு எதிரானது. நடத்த வேண்டும் என்று கோருவது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒரு வாரம் கழித்து வாக்கெடுப்பு நடத்தினால் எம்எல்ஏக்கள் மிரட்டப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
கண்ணியமானவர் சபாநாயகர்
சட்டசபையில் சபாநாயகரின் கையை பிடித்து இழுப்பது எந்த விதத்தில் நியாயம்? தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால்தான் அவர் அப்படி செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது. அவர் ஜனநாயக ரீதியாக சிறப்பாக அன்று செயலாற்றினார்.
திமுக அராஜகம்
சட்டசபையில் இருந்து வெளியில் போங்கள் என்று சபாநாயகர் சொன்னால் வெளியில் போவதுதான் நியாயம். காங்கிரஸ் உள்ளிட்ட மற்றக்கட்சிகள் போனது போல் இவர்களும் போக வேண்டியதுதானே. அவர்கள் அப்படி செய்யாமல் சட்டசபையில் ரகளை செய்தனர். அதனால்தான் யாரையாவது வைத்து சபாநாயகர் அவர்களை வெளியேற்றினார். அதில் என்ன தவறு இருக்கிறது.
ஆட்சியை கலைக்க ஆசை
ஆட்சியை கலைக்க வேண்டும் என்று திமுக ஆசைப்படுகிறது. அதற்காகத்தான் அவர்கள் இதை எல்லாம் செய்கிறார்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடத்தி ஆட்சிக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்த முயல்கிறார்கள். இதன் மூலம் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை.