500 கிலோ செம்மரக்கட்டை பதுக்கல்... பினுவுடன் பிரபல நடிகைகளுக்கும் தொடர்பா?
சென்னை மலையம்பாக்கத்தில் குளத்தின் அருகே பதுக்கப்பட்டிருந்த 500 கிலோ செம்மரக்கட்டை பதுக்கிய பினுவுடன் பிரபல நடிகைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Recommended Video
சென்னை: சென்னை மலையம்பாக்கம் குளத்தின் கரையில் 500 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகளை அசலாட்டாக பதுக்கிய பினுவின் கூட்டாளிகளாக பிரபல நடிகை நீத்து, சங்கீதா சாட்டர்ஜி உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சென்னை பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் கடந்த 6-ம் தேதி இரவு தாதா பினுவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட 76 ரவுடிகளை போலீ ஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், எந்த காவல் நிலையங்களில் அவர்கள் மீது வழக்கு நிலுவை யில் உள்ளது என்று ஆய்வு செய்து, அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
காவல் நிலையங்களில் பழைய குற்ற வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, 70 பேர் சைதாப்பேட்டை, எழும்பூர், பூந்தமல்லி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதவிர, ஒருவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 17 வயதுக்கு உட்பட்ட 2 பேரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். முக்கிய ரவுடியான பினு, சாக்கடையில் குதித்து தப்பிச் சென்றுவிட்டார். பினுவின் கூட்டாளிகளான விக்கி, கனகுவும் போலீஸ் வலையில் இருந்து தப்பிவிட்டனர்.
தனிப்படை போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை
தப்பியோடிய பினு உள்ளிட்ட 3 பேரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இந்த தனிப்படையினர் சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திண்டிவனம் பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
அசால்ட்டு பினு
பிறந்தநாள் விழா நடத்தப்பட்ட மலையம்பாக்கம் பகுதியில் ரவுடிகள் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா என்று போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, மலையம்பாக்கம் குளத்தின் கரையில் 500 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகள் கிடந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வெளிமாநில ரவுடிகள் உதவியுடன்
ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மட்டுமின்றி செம்மரக்கட்டை கடத்தலிலும் பினு கொடிகட்டிப் பறந்தாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 500 கிலோ செம்மரக்கட்டைகளை அசால்ட்டாக பினு பதுக்கியிருந்ததன் மூலம் போலீசாரின் விசாரணை வளையம் இந்த கோணத்திலும் விரிகிறது.
பினுவின் கூட்டாளிகளான நடிகைகள்
ஆந்திர ரவுடிகளின் துணையுடன் பினு செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்தினார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர நடிகை நீத்து அகர்வால் மற்றும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மாடல், விமானப்பணிப்பெண்ணான சங்கீதா சாட்டர்ஜிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.