ஆம்பூர் கலவரம்: ஜூலை 24 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு
ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஜூன் 27 அன்று நடந்த கலவரத்தினால் அந்நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இன்றுடன் தடை உத்தரவு முடிவடையும் என்று இருந்த நிலையில் ஜூலை 24 வரை தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக திருப்பத்தூர் கோட்டாட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார்.
ஆம்பூரில் மாயமான பவித்ரா என்ற இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீஸ் விசாரணைக்குச் சென்ற இளைஞர் ஷமீல்அகமது கடந்த ஜூன் 26ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து ஜூன் 27ம் தேதி ஆம்பூரில் கலவரம் வெடித்தது. இதில் போலீஸாரும் பொதுமக்களும் தாக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் டவுன் போலீஸார், நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். பவித்ரா சென்னையில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீசார், கடந்த 7ம் தேதி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர், விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மேலும் வன்முறை ஏற்பாடாமல் தடுக்கும் வகையில் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் கடந்த ஜூலை 5ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜூலை 15 ம் தேதி வரை 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து இந்த உத்தரவு இன்று 15ம் தேதி இரவு முடிவுக்கு வர உள்ளது.
இந்நிலையில் அங்கு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் ஆம்பூரில் பதட்டம் எழுந்துள்ளது. எனவே தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என சில போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதே நேரத்தில் வருகின்ற 18ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அனால் தடை உத்தரவை நீட்டிக்க கூடாது என முஸ்லீம் அமைப்புகள் போலீஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து இன்று ஆலோசனை நடத்திய போலீஸ் உயர் அதிகாரிகள் ஆம்பூரில் மேலும் 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனர். திருப்பத்தூர் கோட்டாட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார்.
ஷமீல் இறந்தது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த ஷமீலின் உறவினர்கள், பள்ளிகொண்டா போலீஸார், ஆம்பூர் அரசு மருத்துவர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஷமீல் அகமது மரணம் தொடர்பாக, பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இவரோடு சேர்த்து, ஏழு போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதும், இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்த, போலீசார் இரு முறை,'சம்மன்' அனுப்பினர். ஆனால், இன்ஸ்பெக்டர் தலைமறைவாகி விட்டார். மூன்றாவது முறையாக, மீண்டும், சம்மன் அனுப்பியுள்ளனர்.