தேவர் குருபூஜை, இமானுவேல் சேகரன் நினைவுதினம்- ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
ராமநாதபுரம்: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினம் மற்றும் பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடை பெறுவதையொட்டி, இன்று முதல் இரண்டு மாத காலத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்படுகிறது.
வரும் 11ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதேபோல அடுத்த மாதம் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பசும்பொன்னில் தேவர் குருபூஜைவிழா நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுஅமைதியை கருத்தில் கொண்டும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பரிந்துரையின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பிறப்பித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு இன்றுமுதல் 2 மாத காலத்துக்கு அமலில் இருக்கும். இந்த தடை உத்தரவு காலத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.