அதிமுக கோஷ்டி மோதல் அபாயம் எதிரொலி: புதுக்கோட்டையில் வெள்ளியன்று 144 தடை உத்தரவு
அதிமுக கோஷ்டிகள் மோதும் அபாயம் இருப்பதால் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: அதிமுகவின் முதல்வர் எடப்பாடி, தினகரன் கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை இருப்பதால் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நாள்தோறும் மாற்றி வருகிறார் டிடிவி தினகரன். அதிமுகவில் இது உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினகரனால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளனர். இதற்கு போட்டியாக முதல்வர் எடப்பாடி அணியினரும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் இரு அணிகளுக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று சார் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளும் அதிமுக ஆட்சியில் அதிமுகவினர் மோதலில் ஏற்படும் என கூறி அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.