தருமபுரி இளவரசன் 2வது ஆண்டு நினைவு தினம்... 195 கிராமங்களில் 144 தடை உத்தரவு!
தருமபுரி: ஜாதியை மறுத்து காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் இறந்த தருமபுரி இளவரசனின் 2வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாவட்டத்தின் 195 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் தலித் இளைஞரான இளவரசன், மற்றொரு ஜாதியைச் சேர்ந்த திவ்யாவை திருமணம் செய்து கொண்டார். இதற்கு திவ்யா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தரும்புரி சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் வன்முறையே வெடித்தது.
மேலும் இந்த திருமணம் குறித்த வழக்கு நீதிமன்றத்துக்கும் போய் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி இளவரசன் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜூலை 4-ந் தேதி இளவரசனின் 2வது ஆண்டு நினைவு தினம் வருகிறது. இதனை அனுசரிக்க பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இதையொட்டி வன்முறை சம்ப்வம் நிகழ்ந்த நத்தம் காலனி உள்ளிட்ட 195 கிராமங்களில் ஒரு வார காலத்திற்கு 144 தடை பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.