தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டது
தூத்துக்குடியில் விதிக்கப்பட்ட 144 தடை திரும்பப்பெறப்பட்டது. இயல்பு நிலை திரும்புவதால் 144 தடை திரும்பப்பெறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100 நாட்களுக்கும் மேலாக அவர்கள் போராடி வந்தனர். கடந்த செவ்வாய் கிழமை அவர்கள் நடத்திய அமைதி பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் இதுவரை மத்திய அரசு இந்தத் கண்டனமும் தெரிவிக்கவில்லை. முக்கியமாக பிரதமர் மோடி இப்படி ஒரு சம்பவம் நடந்தது கூட தெரியாதது போல இருக்கிறார். இது மக்கள் மத்தியில் பெரிய கோபத்தை உண்டாக்கியுள்ளது.
மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது, கிட்டத்தட்ட கடந்த ஒருவாரமாக அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இடையில் இரண்டு நாட்கள் இணையதளம் கூட முடக்கப்பட்டது. கடந்த ஒருவாரமாக அப்பகுதி மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு அப்படியே இருந்தாலும், பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது. கடைகள் திறக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது. 144 உத்தரவை வாபஸ் பெறுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.