கொள்ளை போகும் கோவில் சொத்துக்கள்.. கடும் நடவடிக்கை எடுக்குமா அரசு?
தமிழக கோவில்களில் சொத்துக்கள் கொள்ளை போகின்றன. விலைமதிப்பில்லாத சிலைகள் கடத்தப்பட்டது ஒரு புறம் இருக்க தங்க தேர், விமானம், கொடி மரத்தில் தங்க முறைகேடு நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை: சிவன் சொத்து குலநாசம் என்று அஞ்சி திருநீரு பிரசாதத்தை கூட வீட்டிற்கு கொண்டு வராமல் அஞ்சுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கோவில் சிலைகளை கடத்தி வெளிநாடுக்கு விற்பது தொடங்கி கோவில் சொத்துக்களை சுரண்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில், தங்க தேர், தங்க விமானம் செய்யப்பட்டது.
ஆண்டுக்கு 80 லட்சத்துக்கும் மேல் வருமானமுள்ள 65 கோயில்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக நன்கொடையாளர்களிடம் இருந்து தங்கம் பெறப்பட்டது. கோவில் உண்டியல்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய தாலி, மோதிரம் மற்றும் தங்க காசுகளும் சேர்க்கப்பட்டன.
சுத்தமான தங்கமாக உருக்கி தங்க கட்டிகளாக உருமாற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் 40 கோயில்களில் தங்கத்தேர் செய்யப்பட்டது. ஒவ்வொரு தேர் செய்யவும் சுமார் 15 கிலோ தங்கம் தேவைப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதில் குறைந்த அளவிலான தங்கமே பயன்படுத்தப்பட்டதாகவும், மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகவும், கடந்த 2013ஆம் ஆண்டு முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றது.
இதனையடுத்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட அறநிலையத்துறை உயர் அதிகாரி, 20 கோயில்களுக்கு சென்று ரகசிய விசாரணை மேற்கொண்டார். இதில் மோசடிக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்தது. எனினும் அந்த புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் 4 ஆயிரம் கோயில்களில் செய்யப்பட்ட தங்க விமானம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. 51 கோயில்களில் தங்க தேர் செய்யப்பட்டன. இதில், தங்க விமானம், தங்க தேர் செய்ததில் 100 கிலோவுக்கும் அதிகமான தங்களை திருடிவிட்டு அதற்கு பதில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் பெருமாள் கோயில் விமானம், சென்னையில் சிவன், பெருமாள் கோயில்களில் உள்ள விமானம், தங்க தேர்உட்பட தமிழக முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக அறநிலையத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளது. இதே போல கோவில் கொடிமரங்களும் தங்கத்தில் செய்யப்பட்ட இவற்றிலும் கிலோ கணக்கில் தங்கம் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து புகார் அளிக்கப்பட்டும் தங்க தேர் செய்ததில் மோசடி நடந்திருப்பதாக கோயில் நிர்வாகம் அறிக்கை அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரஸ் தங்க சோமஸ்கந்தர் சிலை மோசடி, பழனி முருகன் ஐம்பொன் சிலை மோசடியைத் தொடர்ந்து கோவில்களில் தங்க தேர் செய்யப்பட்டதில் மோசடி, தங்க கொடிமரம், தங்க விமானம் செய்யப்பட்டதில் மோசடி என பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன.
தமிழகம் முழுவதும் கோவிலுக்கு சொந்தமான பல நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தஞ்சைப் பெரியகோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், முறைகேடாக விற்பனைசெய்யப்பட்டு வருவதாக, தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.கோயில்களின் அன்றாட பூஜைகளுக்காகவும் பராமரிப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காகவும்தான் பலர் இந்த நிலங்களை தானமாக கொடுத்து கல்வெட்டுக்களில் பதிவு செய்துள்ளனர். இப்படி கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் மீது அரசு என்னமாதிரியான நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.