ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு.. தொண்டர்கள், தலைவர்கள் குவிவதால்!
தொண்டர்கள், தலைவர்கள் குவிந்து வருவதால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக தலைவர்களம், தொண்டர்களும் குவிந்து வருவதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு மிகப் பெரிய எதிர்ப்புக் குரல் அதிமுகவில் வெடித்துள்ளது. அது யாரும் எதிர்பார்க்காத முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துணிச்சலாக சசிகலாவை எதிர்க்கத் துணிந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு பல மட்டத்திலும் ஆதரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிமுகவிலேயே அவருக்கு ஆதரவு அதிகமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவருக்கு தலைவர்கள், தொண்டர்கள் பலர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சென்னயைில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வரலாறு காணாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டுள்ளது. பல்வேறு தலைவர்களும், நிர்வாகிகளும் குவிந்து வருகின்றனர். தொண்டர்களும் வீட்டுக்கு வெளியே, சாலையில் திரண்டு வருகின்றனர். இதையடுத்து முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான பாதுகாப்பை விட அதிக அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை பெரிய அளவிலான பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்ததில்லை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் தற்போது அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சசிகலா குரூப்பால் அவருக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதாலும், சசிகலா குரூப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளே புகுந்து விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதாலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.