ஜெ. தீர்ப்பு.. கருணாநிதி அவசர ஆலோசனை- வீடு, அறிவாலயத்திற்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவி்ப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாவதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் வீடுகள், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இதனால் பெங்களூரே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கண்காணி்பும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு இடங்களிலும் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பாதகமாக வந்தால் அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் திமுகவினர் பெருமளவில் இங்கு குவிந்து வருகின்றனர். அதேபோல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டிலும் திமுகவினர் குவிந்துள்ளனர்.
கருணாநிதி ஆலோசனை
இந்த நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கருணாநிதி அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர். தீர்ப்புக்குப் பிந்தைய அரசியல் சூழலை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.