உளவுத்துறை எச்சரிக்கை - தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
நெல்லை: மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக ஆட்சி பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்படி உயர் அதிகாரிகளிடம் இருந்து அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு மாலை தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தென் மண்டல ஐஜி அபய்குமார் சிங் உத்தரவின் பேரில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் போலீசார் மாலை முதல் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனை சாவடி வழியாக சென்று வரும் வாகனங்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். விடுதிகளில் தங்கி செல்பவர்களிடம் அவர்களின் செல்போன் எண், முகவரி, அடையாள சான்று ஆகியவற்றை தெளிவாக பதிந்து வைக்குமாறு லாட்ஜ் ஊழியர்களுக்கு போலீசார் அறிவுறித்தியுள்ளனர்.
குறிப்பாக கடலோர பகுதிகளில் சந்தேகம் படும்படியாக நபர்களையும், அவர்களின் தொடர்பு சாதனங்களையும் போலீசார் மற்றும் உளவுத்துறையினர் கண்காணித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
விடுமுறையில் இருக்கும் போலீசார் பணிக்கு திரும்புமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.