நெருங்கும் பொதுத் தேர்வுகள்... நெல்லையில் வினாத்தாள் அறைக்கு சீல் வைப்பு!
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொது தேர்வு நெருங்கி வருவதால் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் முதல் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றனர். தேர்வு நெருங்கி வருவதால் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் தேர்வுகள் தொடங்குகிறது. இதில் 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 1ம் தேதியும், இரண்டாவது வாரத்தில் 11ம் வகுப்பு தேர்வும், மூன்றாம் வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வும் தொடங்குகிறது. இதற்காக மாணவ, மாணவிகள் கடைசி கட்ட தயாரிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
தேர்வுக்கான இறுதி கட்ட பணிகள் அனைத்து பள்ளிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது பள்ளிகளில் திருப்புதல் தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் நடந்து வருகிறது. மேலும் தேர்வு கூட கண்காணிப்பாளர் நியமனம் உள்பட பல்வேறு பணிகளில் தேர்வு துறை ஈடுபட்டு வருகிறது.
தற்போது வினாத்தாள்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவைகள் மாவட்ட கல்வி அதிகாரியின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் மூன்று போலீசார் மாறி மாறி பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். தேர்வு நாட்களில் சம்பந்தப்பட்ட பாடங்களின் வினாத்தாள் மட்டும் இந்த மையங்களில் இருந்து எடுத்து செல்லப்படும் என்று கூறப்படுகிறது.