பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடம் நடத்தினால் - வார்னிங் தரும் பள்ளிக் கல்வித் துறை
சென்னை: தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புளை புறக்கணித்துவிட்டு பிளஸ் 2 பாடம் நடத்துவதைத் தடுக்க அதிரடியாக ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதேநேரத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் கண்டிப்பாக பிளஸ் 2 பாடம் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் மதிப்பெண் பெறவும், 100 சதவீதம் தேர்ச்சி காட்டவும், அதிக மாணவர்களை முக்கிய பாடங்களில் சென்டம் எடுக்க வைக்கவும் தனியார் பள்ளிகளின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றன.
எவ்வளவு மாணவர்கள் மாநில அளவில் தரவரிசையில் இடம் பெறுகின்றனர், எவ்வளவு மாணவர்கள் நூற்றுக்கு நூறு வாங்குகின்றனர் என்பதற்கேற்ப இந்த பள்ளிகள் வணிக நோக்கில் மாணவர்களிடம் பல லட்சம் ரூபாயை நன்கொடையாகவும், கட்டணமாகவும் ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கின்றன.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் சில அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் தனியார் பள்ளிகளை போல பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடம் நடத்த கல்வித் துறையிடம் அனுமதி கேட்டனர்.
இதற்கு கல்வித் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததுடன், "அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடங்களை நடத்தக் கூடாது" என எச்சரித்து உள்ளனர். அத்துடன் எந்தெந்த தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடம் நடத்துகின்றனர் என்பதை ஆதாரத்துடன் கண்டறியவும் உத்தரவிடப்பட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர்கள் மூலம் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் திடீர் ஆய்வு நடத்தவும், மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களை வாங்கிப் பார்த்தும், மாணவர்களிடம், பிளஸ் 1 பாடங்கள் குறித்த கேள்விகள் கேட்டும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களிலுள்ள பல பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.