ஜாமீன் கேட்கிறார் வைகோ.. திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
தேச துரோக வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் புழல் சிறையில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
ராணி சீதை மகாலில் கடந்த 2009-இல் நான் குற்றம்சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வைகோ கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக ஆயிரம்விளக்கு போலீஸார் தேசதுரோக வழக்கின் கீழ் வைகோவை கைது செய்து பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். எனினும் இந்த வழக்கானது எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்.3-ஆம் தேதி வைகோ எழும்பூர் நீதி்மன்றத்தில் ஆஜராகி வழக்கை விரைவில் முடியுங்கள் அல்லது தன்னை கைது செய்யுங்கள் என்று கூறினார் வைகோ.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கோபிநாத், ஜாமீனில் செல்கிறார்களா என்று கேட்டதற்கு வைகோ மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.