ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பிறகு பாருங்கள் நான் என்ன செய்யப் போகிறேன் என்று.. பொடி வைத்து பேசிய தினகரன்!
டிடிவி தினகரன் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு என்ன செய்யப்போகிறேன் என பாருங்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். நான் விதித்துள்ள காலக்கெடு முடிந்ததும் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்று அவர் கூறினார்.
எடப்பாடி தலைமையிலான அணி டிடிவி தினகரனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் எம்பிக்களும் தினகரன் கட்சியை விட்டு விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் தம்பிதுரையையும் எடப்பாடி தரப்பு எதிர்க்க தொடங்கியுள்ளது. ஆனால் எதற்குமே வாய்திறக்காமல் மவுனம் காத்து வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி.
நடக்கக்கூடாதது நடக்கிறது
இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் டிடிவி தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பொதுச்செயலாளர் செயல்பட முடியாத சூழல் நிலவி வருவதால் கட்சியில் நடக்கக்கூடாத செயல்பாடுகள் நடந்து வருவதாக கூறினார்.
எல்லாமே சரியாகிவிடும்
எல்லாமே விரைவில் சரியாகிவிடும் என்ற அவர், நான் ஏற்கனவே 60 நாட்கள் காலக்கெடு விதித்திருக்கிறேன். அந்த காலக்கெடு முடிவடையட்டும். எல்லாமே சரியாகிவிடும் என்றும் தினகரன் கூறினார்.
ஆக.5க்கு பிறகு பாருங்கள்
கட்சி ஒற்றுமையாகத்தான் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்ற அவர் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு எனது செயல்பாடுகளை பாருங்கள், அப்போது உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்றார்.
தலைவர்களாக நினைத்துக்கொண்டு
கட்சி கட்டுக்கோப்பாகத்தான் உள்ளது. ஆனால் சிலர் தங்களை தலைவர்களாக நினைத்துக்கொண்டு கருத்துக்களை கூறிவருகின்றனர். அவை விரைவில் சரியாகிவிடும் என்றார்.
எனக்கு எப்படி தெரியும்?
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் உங்களைப் பற்றி பேசுவதே இல்லை என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன் இதை நீங்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் கேட்க வேண்டும் என்றார். மேலும் செய்தியாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகு விடை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
என்ன நடக்கப் போகிறது?
வார்த்தைக்கு வார்த்தை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு பிறகு தெரியும். அப்போது விடை கிடைக்கும். அப்போது பாருங்கள் என்றே டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார். இதனால் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு எழுந்துள்ளது.