விநாயகர் சிலை வாங்கப் போறீங்களா.. இல்லை "விதை விநாயகர்" வாங்கப் போறீங்களா?
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதை நாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கென விதைகள் நிரப்பப்பட்ட விதை நாயகர்கள் சிலை சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கென சிறியது முதல் மிகப்பெரியது வரை விதவிதமான விநாயகர் சிலைகள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.
விநாயகர் அமர்ந்திருப்பது, படுத்திருப்பது என பல்வேறு வடிவங்களில் வித்தியாசம் காட்டி வந்த வியாபாரிகள் இம்முறை சமூக அக்கறையோடு விநாயகர் சிலைக்குள் விதைகள் நிரப்பி விற்பனை செய்து வருகின்றனர்.
களிமண் சிலைகள்:
கிரீன் விநாயகர் என்ற பெயரில் இந்த விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன. நீர் நிலைகளில் கரைக்கப்படும் போது எவ்வித மாசுபாட்டையும் ஏற்படுத்தாவண்ணம் இந்த சிலைகள் களிமண்ணில் செய்யப்பட்டுள்ளன. அதோடு செயற்கை சாயங்கள் கலக்காமல் இயற்கை வண்ணங்களால் இந்தச் சிலைகள் அழகு படுத்தப்படுகின்றன.
காய்கறி விதைகள்:
நகரங்களில் இட நெருக்கடியால் அவதிப்படும் பிளாட்வாசிகளுக்கென இந்த விதை நாயகர்கள் சிலைகளில் தக்காளி, வெண்டை, கத்தரி போன்ற காய்கறி விதைகள் நிரப்பப் பட்டுள்ளன. இந்த சிலைகளை விநாயகர் சதுர்த்தி முடிந்ததும், சிறு தொட்டியில் வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
செடி வளரும்:
அப்போது பத்தே நிமிடத்தில் சிலை முழுவதும் கரைந்து விடும். பின்னர் அந்தத் தொட்டியில் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வர, அடுத்த சில நாட்களில் அந்த விதைகள் முளைக்கத் தொடங்கும். பின்னர் அவற்றை மண்ணிலோ அல்லது தொடர்ந்து அதே தொட்டியிலோ வளர்க்கலாம்.
மீன்களுக்கு உணவு:
இப்படி செடி வளர்க்க விரும்பாமல், பாரம்பரிய முறைப்படி நீர் நிலைகளில் தான் கரைக்க வேண்டும் என்பவர்களுக்காகவும் பிரத்யேகமாக சிலைகள் செய்யப்படுகின்றன. இவற்றில் பறவைகள் மற்றும் மீன்கள் சாப்பிடும் வகையில் தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் நிரப்பப்படுகின்றன.
சோ அவேர்:
இந்த விதை விநாயகர் சிலைத் தயாரிப்புக்கு விதை போட்டவர் கோவையைச் சேர்ந்த சோ அவேர் (so aware ) தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சுவரஜித் என்ற பொறியாளர். கடந்தாண்டு வியாபார நோக்கில் செய்யாமல், சமூக விழிப்புணர்விற்காக இத்தகைய சிலை விற்பனையை அவர்கள் அறிமுகப்படுத்தினர்.
விற்பனை அமோகம்:
சந்தையில் கிடைக்கும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்டர் சிலைகளை விட குறைந்த விலைக்கே இந்த சிலைகளை அவர்கள் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மக்களிடையே இந்த சிலைகளுக்கு கிடைத்து வரும் ஆதரவைத் தொடர்ந்து சந்தையில் தற்போது பலர் இத்தகைய சிலைகளைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.