'வாழவந்தவன் தான் தமிழகத்தை அச்சுறுத்துகிறான்'.. சீமான் குற்றச்சாட்டு!
வாழவந்தவர்கள் தான் தமிழகத்தை அச்சுறுத்துகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை: வாழவந்தவர்கள் தான் தமிழகத்தை அச்சுறுத்துகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிறந்தவர்கள் தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்றும் சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி தன்னை பச்சை தமிழன் என கூறியது குறித்து சீமானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சீமான் தமிழர்கள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்றார். தமிழகத்தில் பிறந்தவர்கள் தான் தமிழர்கள் ஆவர் என்றும் அவர் கூறினார்.
வாழ வந்தவர்கள் எல்லாம்..
கர்நாடகாவில் இருந்து வாழ வந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆக முடியாது என்றும் அவர் கூறினார். அப்போது யார் தமிழகர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
யார் தமிழர் என்று தெரியாத
யார் தமிழர் என்று தெரியாத என்று செய்தியாளர்கள் மீது பாய்ந்த சீமான், திருமாவளவன் தமிழன், அன்புமணி தமிழன், சரத்குமார் தமிழன் திருநாவுக்கரசர் தமிழன் தானும் ஒரு பச்சை தமிழன் என பட்டியலிட்டர்.
வாழ வந்தவன் தான் அச்சுறுத்துகிறான்
சீமான் ரஜினியை அச்சுறுத்துகிறாரா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சீமான், வாழ வந்தவன் தான் தமிழகத்தை அச்சுறுத்துகிறான் என்றார்.
தண்ணீர் வராது ஆனால்..
சீமான் யாரையும் அச்சுறுத்தவில்லை என்றும் அவர் கூறினார். கர்நாடகவில் இருந்து தண்ணீர் வராது. ஆனால் முதல்வர்கள் மட்டும் வருவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
புதிதாக ஒன்றும் கூறவில்லை
ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், அவர் ஒன்றும் புதிதாக கூறவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அடிப்படை அமைப்பு சரியில்லை என தான் கூறி வருவதாகவும் அவர் கூறினார்.
நானும் அதையேதான் சொல்றேன்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆட்சியை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமரும் குடியரசுத் தலைவரும் கலைக்கலாம். இதைத்தான் நான் மாற்ற வேண்டும் என கூறிவருகிறேன். அதையேதான் ரஜினியும் சிஸ்டம் சரியில்லை என கூறியுள்ளார் என்றார்.
தமிழகம் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது
மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது என்றும் சீமான் குற்றம் சாட்டினார். பாஜகவிடம் தமிழகம் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் சாடினார்.
ஒன்றாக படித்தவர்களா?
விவசாயிகளை சந்திக்காத பிரதமர் முதல்வரை மட்டும் சந்திக்கிறார் என்று கூறிய சீமான், இருவரும் ஒன்றாக படித்தவர்களா ஒருவருக்கொருவர் நலம் விசாரிக்க என்றும் அவர் சாடினார்.