திருமா, அன்புமணியை வசைபாட வேண்டாம்- நாம் தமிழர் கட்சியினருக்கு சீமான் அறிவுரை
திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சமூக வலைதளங்களில் வசைபாட வேண்டாம் என கட்சியினருக்கு சீமான் அறிவுறுத்தியுள்ளனர்.
Recommended Video
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் ஆகியோரை விமர்சிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் சமூக வலைதள பயன்பாட்டாளர்களுக்கு அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
அரசியல் கட்சிகள் பலவும் சமூக ஊடகங்களில் வலம் வந்தாலும், நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் அளவுக்கு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. சீமான் மீது யார் விமர்சனம் முன்வைத்தாலும், அதற்கு உடனடியாக பதில் கொடுக்கும் வகையில் கூர்தீட்டப்பட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் இணையத்தள உறவுகளுக்கு என்ற தலைப்பில் நான்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் சீமான். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்த் தேசிய அரசியல்
எப்பொழுதும் இல்லாத வகையில் தமிழக அரசியலில் தமிழர் இன அரசியலின் தேவை அதிகரித்திருக்கிறது. தமிழ்த்தேசிய அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறோம்.
விமர்சனம் தேவை இல்லை
நமது செயல்பாடுகள், கருத்துக்கள் ஆகியவை கட்சி வளர்ச்சி சார்ந்தே அமைய வேண்டும். அதுவே நம்மை வெல்ல வைக்கும். ஆனால் சமீபகாலமாக நாம் தமிழர் என்ற போர்வையில் அண்ணன்கள் தொல்.திருமாவளவன், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் சக தமிழ் அமைப்புகளின் தலைவர்களை இழிவான வார்த்தைகளில் தரம்தாழ்ந்து விமர்சனம் செய்வதை சிலர் வழக்கமாகக் கொண்டிருப்பதையும் அதனால் நமது அடிப்படை நோக்கம் சிதறி கட்சிக்கு வீண் பழி ஏற்படுவதும் தொடர்கதையாகிவருகிறது. இனி அவற்றை அனுமதிக்க முடியாது.
கண்காணிப்புக் குழு
அத்தகைய நபர்களைச் சரியாக அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க இணையம் வழி இயங்கும் நம் உறவுகள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இரண்டாவதாக, தனது கருத்துக்களைக் கட்சியின் கருத்து போலத் திரித்து எழுதுபவர்கள், உட்கட்சி விஷயங்களைப் பொதுவெளியில் எழுதி கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்துபவர்கள், கட்சியின் கருத்தினை வைத்துப் பொதுத் தளத்தில் விவாதிப்பவர்கள் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்க இணையத் தளக் கண்காணிப்புக்குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
அடையாளம் காட்டுங்கள்
தகுந்த ஆதாரங்களுடன் அக்குழு மேற்கண்டவாறு செயல்படுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யும். மூன்றாவதாக, நம் அமைப்பில் இருப்பது போல் காட்டிக்கொண்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக் கருத்தியலுக்கு மாற்றாகத் தனிநபர் மீதான வன்ம பதிவுகள், அரசியல் விமர்சனங்கள் என்ற பெயரில் கீழ்த்தரமான வார்த்தைகளில் பதில்கள், ஊடகவியலாளர்கள் மீதான உண்மையற்ற குற்றச்சாட்டுக்கள், மதிப்பிற்குரிய தலைவர்கள் பற்றியதான தாக்குதல் பதிவுகள் போன்றவற்றைப் பதிவிடும் பதிவாளர்கள் அடையாளம் காட்டிட நம் உறவுகள் உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கட்சி பதவி இல்லை
இறுதியாக, நம் அமைப்பின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில்.. நம் உறவுகளின் செயல்பாடுகள் மற்றும் பதிவுகள் அமைய வேண்டுமென இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது' என அறிவுறுத்தியிருக்கிறார் சீமான். இதுகுறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர், தமிழ்த்தேசிய அரசியலை நாங்கள் முன்னெடுத்தாலும், இதே கருத்தோட்டத்தில் ஒருகாலத்தில் உறுதியாக இருந்த திருமாவளவன் உள்ளிட்டவர்கள் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களைப் பார்த்துத்தான் சீமான் அரசியல் கற்றுக் கொண்டார். எந்தக் கட்சியின் கூட்டணிக்குள்ளும் அங்கம் வகிக்காமல் எங்களுக்கென்று தனிப்பாதையில் நடைபோடுகிறோம். அதேவேளையில், மண்ணின் மைந்தர்களாக திருமாவளவனையும் அன்புமணியையும் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சிக்கிறார்கள். நாகரிக அரசியலை முன்னெடுக்கும்போது, இதுபோன்ற விமர்சனங்கள் பொதுவெளியில் எங்கள் கட்சியின் மீதான மதிப்பை சீர்குலைக்கிறது. எனவேதான், இந்த நான்கு வழிகாட்டுதல்களை சீமான் பிறப்பித்திருக்கிறார். இதனை மீறுபவர்கள் யாரும் கட்சிப் பதவியில் நீடிக்க முடியாது என்றார்.