பெரியவர் ஏதோ கோவத்தில் அப்படிப் பேசுகிறார்.. நமக்கு நிறைய வேலை இருக்கிறது.. வைகோ குறித்து சீமான்
பெரியவரான வைகோ ஏதோ நம் மீதான கோபத்தில் விமர்சிக்கிறார் என்கிறார் சீமான்.
Recommended Video
சென்னை: நாம் தமிழர் கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. இதனை எதிர்த்து நாம் தமிழர்கள் தொண்டர்களின் தாக்குதல் முயற்சி என அரசியல் வட்டாரம் தகிக்கத் தொடங்கியிருக்கிறது. ' அவர் பெரியவர் ஏதோ நம் மீதிருக்கும் கோவத்தில் அப்படிப் பேசுகிறார். அவருக்கு மட்டுமல்ல காலம் எல்லோருக்கும் புரியவைக்கும்' எனப் பேசியிருக்கிறார் சீமான்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வெள்ளையர் ஆட்சிக் கால கைரேகை சட்டத்தை எதிர்த்து, போராடி உயிரிழந்த பதினாறு பேரின் நினைவிடம் உள்ளது. இந்த நினைவு தினத்துக்காக மரியாதை செலுத்த வைகோ சென்றார்.
இந்தக் கூட்டத்தில் நினைவஞ்சலி செலுத்த நாம் தமிழர் தொண்டர்களும் திரண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ, 'நான் தமிழன் அல்ல என்றும் தெலுங்கன் என்றும் அப்பாவி இளைஞர்களை சிலர் உசுப்பேற்றி விடுகின்றனர். சமூக வலைதளங்களில் ஒரு கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர்.
அந்த கட்சியினர் ஜாதியைச் சொல்லி, என்னை விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்' எனக் கோபாவேசத்தைக் காட்டினார். வைகோவின் நேரடித் தாக்குதலை எதிர்பார்க்காத நாம் தமிழர் தொண்டர்கள், வைகோவுக்கு எதிராக முழக்கமிட்டு கூட்டத்துக்குள் நுழைய முற்பட்டனர். போலீஸார் தலையிட்டதால், விவகாரம் அப்போதைக்கு முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த சம்பவத்தால் கொதித்த நாம் தமிழர் நிர்வாகிகள் சீமானின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றுள்ளனர். அவரிடம் பேசும்போது, ' பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்வதற்காகத் தென் மண்டலச் செயலாளர் வெற்றிக்குமரன் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் நினைவிடத்துக்குச் சென்றனர். அங்குப் போட்டிருந்த மேடையில் வைகோ உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.
அதைப் பார்த்த நாம் தமிழர் கட்சியினர் அவர் பேச்சை முடித்த பின் உறுதிமொழி எடுத்து வீரவணக்க முழக்கமிடலாம் என்று காத்திருந்தனர். நாம் தமிழர் கட்சியினரை பார்த்த வைகோ, பெருங்காமநல்லூர் தியாகிகளைப் பற்றிப் பேசுவதை விடுத்துச் சம்பந்தமேயில்லாமல் உங்களைப் பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார். தன் சாதியை சொல்லி தமிழரில்லை என்று நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ் போடுவதாகவும், தான் எதற்கும் துணிந்தவன் என்றும், பிரபாகரனை 5 நிமிடம் பார்த்துவிட்டு புலிகளின் பெயரை சொல்லி உலகெங்கும் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் என்றும் மிகவும் கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார்.
அப்படியும் நாம் தமிழர் தம்பிகள் அங்கிருக்கும் சூழல் கருதி பொறுமை காத்து நின்றனர். பேசி முடித்துக் கீழிறங்கிய வைகோ அவ்விடத்தை விட்டு வெளியேறும் பொழுது நாம் தமிழர் கட்சியினர் உள்ளே வீரவணக்க முழக்கம் போட்டு நுழைந்திருக்கிறார்கள். ஏற்கனவே கடுப்பில் இருந்த வைகோ அவர்களைக் கடக்கும் பொழுதும் பொதுநிகழ்ச்சி என்று பாராமல் மேடையில் பேசியதை அங்கேயும் கண்டபடி ஒருமையில் பேசி மிரட்டுவது போல் கையைக் காட்டி அவர்களை நோக்கி முன்னேறியிருக்கிறார். அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பிறகு நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து உறுதிமொழி எடுத்து அமைதியாகத் திரும்பிவிட்டனர்.
இதுதான் உண்மையில் நடந்தது. நான் கூறுவது பொய்யெனத் தோன்றினால் அங்கே எல்லா ஊடகமும் இதைப் பதிவு செய்திருக்கிறது. அவர்களிடம் கேட்டு பெற்றுப் பார்த்துக்கொள்ளலாம்' என விளக்கம் அளித்துள்ளனர். இதற்குப் பதில் அளித்த சீமான், ' தமிழ்நாடே போராட்டக்களமாக மாறி நிற்கிறது. நமது இனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது. இதை எல்லாம் எப்படிச் சரி செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. நிலைமை இப்படி இருக்க இதிலெல்லாம் கருத்து சொல்ல என்ன இருக்கிறது? விடு... அவர் பெரியவர் ஏதோ நம் மீதிருக்கும் கோவத்தில் அப்படிப் பேசுகிறார். அவருக்கு மட்டுமல்ல காலம் எல்லோருக்கும் புரியவைக்கும். தம்பிகளிடம் சொல்.. இணையத்தில் அவரின் கருத்துக்கு எந்த எதிர்ப் பதிவும் யாரும் போடக்கூடாதென்று. தொடர்ச்சியாக எல்லா ஊர்களிலும் போராட்டத்தை முன்னெடுப்பதில் கவனத்தைக் கொண்டிருக்கவேண்டும். நமக்கு நிறைய வேலை இருக்கிறது' எனப் பதில் அளித்திருக்கிறார்.