எவன் கேட்டான் மிக்ஸி? எவன் கேட்டான் கிரைண்டர்? யார் கேட்டது செல்போன்? ஜெ.வுக்கு சீமான் கண்டனம்
திருவண்ணாமலை: அதிமுக தேர்தல் அறிக்கையில் ரேஷன்கார்டுதாரர் அனைவருக்கும் இலவச செல்போன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா நேற்று பெருந்துறை பொதுக்கூட்டத்தில் வெளியிட்டார். அதில் ரேஷன்கார்டுதாரர்கள் அனைவருக்கும் இலவச செல்போன் வழங்கப்படும்; பெண்களுக்கு 50% மானியத்தில் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.
இதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் சீமான் பேசியதாவது:
தமிழகத்தில் இலவசங்களை தந்து அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன. மக்களுக்கு தேவை தரமான கல்வி.
இலவசங்கள் எதுவும் தேவையில்லை. ரேஷன்கார்டுக்கு செல்போன் இலவசமாம். செல்போன் வாங்கி, அம்மா ஜெயலலிதாவோட நேரடியாக பேகிக்கிறதா? யாருக்கு பேசுறது?
யார் கேட்டது அலைபேசி. எவன் கேட்டான் மிக்ஸி. எவன் கேட்டான் கிரைண்டர். யார் இதையெல்லாம் கேட்டு போராடினார்கள்?
நாம் கேட்பது கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற சம்பளம். அதைக்கொண்டு மேன்மையான வாழ்க்கை...இதுதானே நாம் கேட்பது..
இவ்வாறு சீமான் பேசினார்.