ஐஐடி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்.. மதவெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்.. சீமான் அதிரடி
மாட்டுக்கறி விழா நடத்திய ஐஐடி மாணவர் சூரஜ்ஜை தாக்கிய மதவெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சீமான் கோரியுள்ளார்.
சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விழா மாணவர்களால் நடத்தப்பட்டது. இதனால் கடுப்பான மதவெறிக் கூட்டம் ஒன்று, விழா நடத்திய சூரஜ் என்ற மாணவரை காட்டுமிராண்டித் தனமாக தாக்கியது.
அதிர்ச்சி
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி விற்பனை தடைச்சட்டத்திற்கெதிராகச் சென்னை இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் விழாவை ஒருங்கிணைத்த பெரியார் - அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் சூரஜ் மீது பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தாக்குதல் தொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. சகிப்புத்தன்மை என்பது துளியுமற்ற, கருத்தியல்ரீதியாக எப்போதும் அணுகத்திராணியற்ற அடிப்படைவாதிகளின் மதத்துவேசமும், காட்டுமிராண்டித்தனங்களுமே இதுபோன்ற தாக்குதலாக உருமாறுகிறது. இவை வன்மையான கண்டனத்திற்குரியது.
பாஜகவின் சித்து விளையாட்டு
வடமாநிலங்களில் மட்டுமே இதுநாள்வரை அரங்கேற்றப்பட்டு வந்த இதுபோன்ற வன்முறைச்செயல்கள் இப்போது தமிழகத்திலும் தொடருவது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மக்களிடம் மத உணர்வைத் தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைகொண்டு அம்மாநில அதிகாரத்தைக் கைப்பற்றும் பாஜகவின் சித்துவேலைகளின் தொடக்கம்தான் இதுவென்பதில் ஐயமில்லை.
பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் நுழைவு
அதற்குத் தமிழகம் ஒருபோதும் இடந்தரக்கூடாது. இவைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த வருடம் பயிற்சி முகாம் என்ற பெயரில் சாஸ்தா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகப் பள்ளி கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்நுழைந்ததைப் போன்று இனி அனுமதிக்கக்கூடாது.
குண்டர் சட்டத்தில் கைது
கல்லூரி நிர்வாகங்கள் ஏ.பி.வி.பி போன்ற மதவாத குண்டர்களைக் கொண்ட மாணவர் அமைப்பை தங்கள் கல்லூரிக்குள் ஊக்குவிக்கக்கூடாது. இனியேனும் கல்விக் கூடங்களைக் காவிக் கூடங்களாக்க முனையும் மதவெறியர்களின் செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டத்தில் கீழ் அவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும். நினைவேந்தல் நிகழ்வை நடத்தியதற்குக் குண்டர்சட்டம் பாய்ச்சும் தமிழக அரசு இம்மாதிரியான காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்துபவர்கள் மேல் அச்சட்டத்தைப் பாய்ச்சாதா?
கொடுஞ்செயல்
ஏழ்மையும், வறுமையும், உழைப்புச்சுரண்டலும் மிகுந்ததால் பசி, பட்டினியையும், ஊட்டச்சத்து குறைப்பாட்டையும் நாள்தோறும் எதிர் கொண்டிருக்கிற இந்தியப் பெருநாட்டில் மலிவுவிலை இறைச்சியான மாட்டிறைச்சி விற்பனை மீதானத் தடை என்பது ஏழை மக்களின் தட்டிலிருக்கும் உணவைத் தட்டிப்பறிக்கிற கொடுஞ்செயலாகும்.
உணவை அரசு தீர்மானிப்பதா?
தனியொரு மனிதனது உணவை அரசுத் தீர்மானிக்க முனையும் பாஜக அரசின் இப்படுபாதகப் போக்கானது சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் அரசப் பயங்கரவாதமாகும். இது அரசியலமைப்புச்சட்டத்திற்கும், இந்நாடு ஏற்றிருக்கிற மக்களாட்சித் தத்துவத்திற்குமே ஊறு விளைவிப்பதாகும். இதனைத்தான் மதுரை உயர்நீதிமன்றக் கிளையானது சுட்டிக்காட்டி மத்திய அரசின் தடைச்சட்டத்திற்கு இடைக்காலத்தடை பிறப்பித்திருக்கிறது. இதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது.
கண்டனம்
மாணவர் சூரஜ் மீதான இத்தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து, தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழர் மண்ணில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனியொரு காலத்திலும் அரங்கேறாவண்ணம் கடும் சட்டம் கொண்டு தடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.