ஈழத் தமிழர் குறித்த சேரன் பேச்சுக்கு கண்டனம்- பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க சீமான் வலியுறுத்தல்
சென்னை: திருட்டு டிவிடி விவகாரத்தில் ஈழத் தமிழர்கள் குறித்த இயக்குநர் சேரன் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுவெளியில் சேரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கன்னா பின்னா திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர், ஈழத் தமிழர்கள் திருட்டு டிவிடியை தயாரிப்பதாகவும் அவர்களுக்காக போராடியது அருவருப்பாக இருக்கிறது எனவும் கூறியிருந்தார்.
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சேரனின் இந்த பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளதாவது:
ஈழத் தமிழருக்காக போராடுவது என்பது தமிழர் கடமை. நாம் பிறந்த இந்த சமூகத்துக்காகப் போராடுவது என்பது கடமை.
ஒருவரை போராட வருமாறு யாரும் அழைப்பதில்லை. நாமேதான் நம் சமூகத்துக்காக போராட வேண்டும். லாபத்தை எதிர்பார்த்து போராடுவது என்பது ஏமாற்றுவது.
திருட்டு விசிடியை ஒருசில ஈழத் தமிழர் அச்சிட்டு கொடுக்கின்றனர் எனில் அதை தமிழ்நாட்டில் சந்தைப்படுத்துவது ஈழத் தமிழர்கள் அல்ல என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
லாட்டரியை ஒழிக்க முடிந்த அரசால் ஏன் திருட்டு விசிடியை ஒழிக்க முடியாமல் போனது? சேரனின் பேச்சு என்னையும் உலகத் தமிழர்களை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது.
இதனால் சேரனிடம் இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என சொல்லி இருக்கிறேன். நிச்சயம் சேரன் வருத்தம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறேன்.
தற்போது பேசியது போலவே ஒரு பொதுவெளியில் சேரன் இதற்காக பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.