மோடி கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: சீமான் கண்டனம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதும், 80-க்கும் அதிகமானோர் படுகாயமுற்றிருப்பதும் நமது நாடு பாதுகாப்பற்ற ஒன்றாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
பொதுவாகவே பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தலைவர் எவராயினும் அவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு முன்னர் அந்நிகழ்விடத்தில் கடும் சோதனை நடத்தப்படும். ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசிய அந்த கூட்டம் நடந்த மைதானத்தில் அப்படியொரு சோதனை நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை.
இது முழுக்க முழுக்க ஆட்சியாளர்களின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல், உங்களின் பாதுகாப்பை மட்டும் பலமாக உறுதி செய்துகொள்கிறீர்களே என்று மக்கள் கேட்கும் காலம் வரும், வர வேண்டும்.
எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை முன்னுரிமையாகக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். வெற்று வார்த்தைகளும், கண்டனங்களும், அனுதாப செய்திகளும் பாதுகாப்பை தந்துவிடாது என்று கூறியுள்ளார்.