விலைமதிப்பற்ற உயிர்களை இழப்பது வேதனை தருகிறது.. ஷாலினி மறைவுக்கு சீமான் இரங்கல்
Recommended Video
சென்னை: மாலைமுரசு செய்தியாளர் ஷாலினி சாலை விபத்தில் மரணமடைந்ததற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதகுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:
மாலைமுரசு தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்த ஈரோட்டை சேர்ந்த தங்கை சாலினி அவர்கள் நேற்று 15-07-2018 இரவு சேலத்திலிருந்து செய்தி சேகரித்துவிட்டு மகிழுந்தில் மதுரை திரும்பும் வழியில் திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் சிக்குண்டு மரணமடைந்தார் என்பதையறிந்து மிகுந்த மனவேதனையுற்றேன்.
தொடர் பயணங்கள் நிறைந்த செய்தியாளர் பணியில் உயிர் பாதுகாப்பு மிகவும் முக்கியம். உண்ண, உறங்க நேரமின்றி பயணிப்பது; இடவார் (Seat Belt), தலைக்கவசம் (Helmet) போன்றவற்றை பயன்படுத்தாதது, இரவு நேரங்களில் அதிவேகப் பயணம் போன்றவற்றால் மிகச்சிறந்த ஆளுமைகளின் விலைமதிப்பற்ற உயிரை இழக்கநேரிடுவது மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
என் உயிருக்கினிய தம்பி தங்கைகள் இனியேனும் சாலை விதிகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். தங்கை சாலினியை இழந்துவாடும் பெற்றோர், உறவினர், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தம்பிகள் இராம்குமார், சதீஷ் ஆகியோர் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.