விக்னேஷ் மரணம்.. தமிழ் உணர்வுள்ள யாரும் இனிமேல் சாகக் கூடாது... சீமான் கோரிக்கை
சென்னை: காவிரியில் தமிழர்களின் உரிமையை வலியுறுத்தி விக்னேஷ் உயிர் தியாகம் செய்துள்ளார். மேலும் நாட்டின் வளங்கள் அனைவருக்கும் பொதுவானது. இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்க காவிரி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்கள் விவசாயிகளுக்கு ஆறுதலாகக் கூட பேசுவதில்லை என சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி உரிமை மீட்பு பேரணியில் கலந்துகொண்டு தீக்குளித்த விக்னேஷ் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 93 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை கவலைக் கிடமாக இருந்தது. நினைவு இழந்த நிலையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த உடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனைவி கயல்விழி மற்றும் தொண்டர்களுடன் மருத்துவமனைக்கு வந்து விக்னேஷ் உடலை பார்த்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
மனவலியை தந்த மரணம்
செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விக்னேஷ் மரணம் மனவலியை தருகிறது என்றார் . அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன், தொண்டர்கள் அமைதியான வழியில் போராட வேண்டும் என்று கூறினார். மேலும், நாட்டின் இயற்கை வளங்கள் அனைவருக்கும் பொதுவானது, காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசு இந்த பிரச்சினையில் ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடரும் தற்கொலைகள்
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக முத்துக்குமார், செங்கொடி ஆகியோர் உயிர்தியாகம் செய்தனர். அப்போதே உணர்ச்சி வசப்பட்டு தமிழ் இளைஞர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கூறினேன். தொடர்ந்து அறிவுறுத்தியும் வந்துள்ளேன்.
இப்போது காவிரி பிரச்சினை கர்நாடகாவில் கொளுந்து விட்டு எரிந்த தாலேயே இங்குள்ள இளைஞர்கள் உணர்ச்சி மயமாக இருந்தனர். அது போன்ற மனநிலையில் இருந்ததாலேயே விக்னேஷ் தன்னை வருத்திக் கொண்டு உடலில் தீ வைத்து உயிரிழந்துள்ளார்.
வேதனைப் படுகிறேன்
இந்தியாவில் உள்ள வளங்கள் அனைத்துமே அனைவருக்கும் சொந்தம். ஆனால் தமிழர்கள் தொடர்ந்து தங்களது உரிமைக்காக வஞ்சிக்கப்படும் நிலை இருந்து வருகிறது. இந்த சம்பவத்துக்கு பிறகாவது மத்திய-மாநில அரசுகள் காவிரி பிரச்சினையில் செவி சாய்க்குமா? என்பதும் சந்தேகமே.
காவிரி தண்ணீரும் இல்லை. அதற்காக களப்பணியாற்றிய தம்பியும் எங்களோடு இல்லை. அதை நினைத்தாலே மிகவும் வேதனையாக உள்ளது.
தற்கொலைகள் வேண்டாம்
தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் இதற்கு மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தங்களது எண்ணங்களையும் கோரிக்கைகளையும் வலுவான போராட்டங்கள் மூலமாகவே இனி வரும் காலங்களில் அவர்கள் முன் எடுத்து செல்ல வேண்டும் என்றார்.
சொந்த ஊரில் தகனம்
விக்னேஷ் தீக்குளித்த தகவல் அறிந்து அவரது தந்தை பாண்டியன், தாய் செண்பகலட்சுமி, அக்காள் ஜனனி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று இரவு 1 மணி அளவில் சென்னை வந்தனர். மகன் உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.பிரேதப் பரிசோதனை முடிந்து விக்னேஷின் உடலுக்கு வணிகர் சங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர் பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். விக்னேஷ் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு மூவாநல்லூர் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.