கூடங்குளம் அணு உலை... தமிழகத்தை ஒழிக்க துடிப்பதாக மத்திய அரசு மீது சீமான் குற்றச்சாட்டு
கூடங்குளம் அணு உலையால் தமிழகத்தை ஒழிக்க மத்திய அரசு துடிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நெல்லை: கூடங்குளத்தில் புதிய அணு உலைகளை மத்திய அரசு நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அக்கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில்,
கூடங்குளத்தில் தொடர்ச்சியாக மேலும் பல புதிய அணு உலைகளை நிறுவி தமிழகத்தை முற்றாக ஒழிக்க துடிக்கும் மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நேற்று மாலை 5 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்றது.
கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சு. ப. உதயகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு மற்றும் சீமான் ஆகியோர் கண்டனவுரையாற்றினார்கள். முன்னதாக வீரப்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாளையொட்டி நினைவுச் சுடரேற்றி மலர்வணக்கம் செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சி மாநில, மண்டல மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கூடங்குளம், வள்ளியூர் பகுதி பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.