விஜயகாந்த் வீட்டு வாசலில் காத்து கிடப்பதா?: வைகோ, திருமாவுக்கு சீமான் கேள்வி
கரூர்: புரட்சி பேசி விட்டு, யார் என்றே தெரியாதவர் வீட்டு வாசலில் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் காத்திருப்பது வருத்தமளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கரூர் அருகே உள்ள மண்மங்கலத்தில் பூட்டிக்கிடக்கும் நெசவாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை சமுதாயக்கூடமாக மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நெசவாளர் கட்டிடத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமான். அப்போது அவர், ‘ஜல்லிக்கட்டு பற்றி நாடாளுமன்றம் முடியும் நாளில் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார். நாடாளுமன்றக் கூட்டம் முடியும் நாளில் சட்டத் திருத்தம் கொண்டுவர கோரியது கண்துடைப்பு. ஏமாற்றுவேலை. சுப்ரீம் கோர்ட் கூறியவாறு முறைப்படுத்தப்பட்ட நெறிமுறைப்படி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை எனில் தடையை மீறி போட்டியை நடத்த வேண்டி வரும்" என்றார்.
மேலும், புரட்சி பேசி மக்களுக்கு அரசியல் விதைத்த மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களான வைகோ, திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் ஆகியோர் புரட்சி பேசிவிட்டு, தற்போது யார் என்றே தெரியாத ஒருவர் வீட்டு வாசலில் காத்திருப்பது வருத்தம் அளிக்கிறது என அவர் தெரிவித்தார்.
விஜயகாந்த் கட்சி வாசலில் போய் இந்தத் தலைவர்கள் இப்படிக் காத்துக் கிடப்பதைத்தான் இப்படிக் குட்டியுள்ளார் சீமான்.