8 வழிச்சாலையை எதிர்த்து தற்கொலை.. விவசாயி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. சீமான் கோரிக்கை
8 வழிச்சாலையை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயி சேகர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனால் அரசு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் உயிரிழந்த விவாசாயி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை - சேலம் இடையேயான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துகொண்ட விவசாயி சேகருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை - சேலம் இடையிலான எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் தனது விவசாய நிலமும், பூர்வீக வாழ்விடமும் பறிபோவதை அறிந்து அத்துயர் தாளாது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சேகர் நஞ்சுண்டு மாண்ட செய்தியானது பெரும் மனவேதனையைத் தருகிறது. எதன்பொருட்டும் ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் விவசாயி சேகரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரில் பங்கெடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீமான் தன்னுடைய அறிக்கையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் மீது வலுக்கட்டாயமாக எட்டுவழிச் சாலைத் திட்டத்தை திணிக்க முற்பட்டதன் விளைவாகவே விவசாயி சேகர் உயிரிழந்திருக்கிறார் என்பதன் மூலம் ஆளும் அதிமுக அரசு தனது அதிகாரத் திமிரின் மூலமும், சர்வாதிகாரப்போக்கின் மூலமும் செய்த கோரப்படுகொலை இதுவென்பது தெளிவாகப் புலனாகிறது. ஜனநாயக நாடான இந்நாட்டில் மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு திட்டத்தை வளர்ச்சி எனும் மாயப் பிம்பத்தைக் காட்டித் திணிக்க முற்படுவது அப்பட்டமான சனநாயகத் துரோகமாகும். அந்தவகையில் காலங்காலமாக தாங்கள் வாழ்ந்து வந்த வாழ்விடமும், நிலமும் பறிபோகப் போகிறது எனும் கொடுந்துயரமே அநியாயமாக ஒரு விவசாயினுடைய உயிரைப் பறித்திருக்கிறது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சீமான் 8 வழிச்சாலை திட்டம் குறித்து குறிப்பிடுகையில், இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் சென்னைக்கும், சேலத்திற்கும் இடையேயான பயணத்தில் 2 மணிநேரத்தை மிச்சப்படுத்தலாம் என்பதைத் தாண்டி இத்திட்டத்தின் மூலம் மக்கள் பெறப் போகும் நன்மையாக ஆளும் வர்க்கம் எதனைக் கூறுகிறது?
வெறும் 2 மணிநேரச் செலவைக் குறைப்பதற்காக மலைகளையும், காடுகளையும், நீராதாரங்களையும், விவசாய நிலங்களையும், வீடுகளையும், வாழ்விடங்களையும் அழிக்க முற்படுவது எவ்விதத்தில் நியாயம்?
இயற்கையின் அருட்கொடையாகத் திகழும் மலைகளையும், நதிகளையும் சிதைத்தழித்துவிட்டு சாலைகளை அமைத்து மக்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிப்பதுதானா இவர்கள் காட்டும் வளர்ச்சி?
இவ்வளவு நாட்களாக நீரைக் கேட்டுப் போராடிய விவசாயிகளை இன்றைக்கு நிலத்தையே கேட்டுப் போராடுகிற துயர்மிகு நிலைக்குத் தள்ளிவிட்டிருப்பதுதானா இவர்கள் கொண்டிருக்கிற முன்னேற்றம்?
தங்களது நிலம் பறிபோகிறது என இழப்பின் வலியுணர்ந்து அறவழியில் மக்கள் ஒன்றுகூடினாலோ, அவ்வாறு கூடும் மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தினாலோ அவர்கள் மீது வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவதும், அவர்களின் வீடுகளுக்குக் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவதும் எவ்விதத்தில் ஏற்புடையது?
ஜனனநாயக நாட்டின் மாண்புகளுக்கும், அறநெறிசார் ஆட்சிக்கும் இதுவா அழகு?
மக்களே இத்திட்டத்தை முழுவீச்சில் எதிர்த்து களத்தில் நிற்கிறபோது எதற்காக இத்திட்டத்தை நிறைவேற்ற கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது அதிமுக அரசு? என்று சீமான் அரசை நோக்கி அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், 8 வழிச்சாலைத் திட்டம் உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளின் வளச் சுரண்டலுக்கான வேட்டைக்காடாக தமிழகத்தை மாற்றுவதற்காக திணிக்கப்படுகிறது. இத்திட்டம் தனிப்பெருமுதலாளிகளின் நலன்களுக்கானது. மண்ணின் மக்களுக்கு நலம் பயப்பதாக இருக்கப்போவதில்லை என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தற்கொலை செய்துகொண்ட விவசாயி சேகரின் மரணமானது இத்திட்டத்திற்கு எதிரான மக்களின் பெரும் எதிர்ப்புணர்வின் குறியீடு. அதற்கு மதிப்பளித்து இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டியது மக்கள் நலனை விரும்பும் ஓர் அரசின் தலையாயக் கடமையாகும். எனவே, நிலப்பறிப்பால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி சேகரின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மக்களின் போராட்ட உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் சென்னை - சேலம் இடையிலேயான எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.