தமிழகத்தில் ஊழல்.. லஞ்சம் இருக்குத்தானே.. கமல் கேட்டதில் என்ன தப்பிருக்கு.. சீமான் பொளேர்
தமிழகத்தில் ஊழல், லஞ்சம் மலிந்துதான் காணப்படுகிறது. நடிகர் கமல் கேட்டதில் என்ன தப்பு இருக்கிறது என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தின் எந்தத் துறையை எடுத்தாலும் ஊழலும் லஞ்சமும் காணப்படுகிறது. இதை கமல் சொன்னதில் என்ன தப்பு இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் காமராஜரின் 115வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சீமான் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ஒரு அரசை, ஒரு அரசு நிர்வாகத்தை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. கமல் சொல்வது போன்று வாக்கு செலுத்தும் போதே அந்த உரிமை அனைவருக்கும் வந்துவிட்டது. நிர்வாகத்தில் ஊழல் இருக்கு என்று சொன்னால் ஏன் இவ்வளவு கோபம்?
விமர்சித்தால் வழக்கா?
அரசு மீது வைக்கப்படும் விமர்சனம், உண்மை இல்லை என்றால் கோபப்படத் தேவையில்லை. ஒரு அரசை விமர்சித்தாலே வழக்கு போடுவோம் என்றால் என்ன அர்த்தம்? அப்படி சொன்னால் அது அரசல்ல.
கமல் மீது நடவடிக்கை என்பது வேடிக்கை
தமிழகத்தில் எந்த இடத்தில் ஊழல் இல்லை. சத்துணவு ஆயாவிடம் 3 லட்சம் வாங்கி கொண்டு வேலை கொடுக்கின்றீர்களா இல்லையா? இல்லை என்று சொன்னால் வெட்டிப் பேச்சு. ஊழல் இருக்கிறது என்பதை அமைச்சர் ஒத்துக் கொண்டு, இனி ஊழல் இல்லாத நிர்வாகத்தை கொடுப்போம் என்று சொல்ல வேண்டும். இதைவிட்டு விட்டு, கமல் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
கமல் பேசுவது மகிழ்ச்சி
கலைஞர்கள் எப்போதுமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கோடிக் கணக்கில் செலவு செய்து ஒருவர் படம் எடுக்கும் போது அது பாதிக்கக் கூடாது என்று ஒரு நடிகர் நினைத்து பல சமயத்தில் அமைதியாக இருக்கலாம். ஆனால், இன்று கமல் பேசுகிறார் என்றால் அதை குறை சொல்ல முடியாது. இன்றைக்காவது பேசுகிறாரே என்று மகிழ்ச்சிதான் அடைய வேண்டும்.
Recommended Video
காயத்ரி வருத்தம் தெரிவிக்க வேண்டும்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என்று காயத்ரி ரகுராம் சொன்ன வார்த்தையை தவிர்த்து இருக்க வேண்டும். இது நேரலை நிகழ்ச்சியும் இல்லை. தொகுத்துப் போடும் போது அந்த வார்த்தையை நீக்கி இருக்க வேண்டும். இந்த சொல் பல லட்சம் மக்களை காயப்படுத்திவிட்டது. அது தவறு. அதற்கு காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.
தமிழக அரசின் அடிமைத்தனம்
நீட் தேர்வு, ஜிஎஸ்டி ஆகியவைகளுக்கு தமிழக அரசு ஒப்புக் கொண்டுவிட்டது. ஜிஎஸ்டி என்பது மாநில தன்னாட்சி மேல் தொடுக்கப்பட்ட ஒரு போர். இதற்கு மாநில அரசு அடி பணிந்துவிட்டது.
ரஜினி வேண்டாம்
வேறு மாநிலத்தவர் தமிழ்நாட்டில் அரசியலுக்கு வரக் கூடாது. இதனை ஏற்றுக் கொள்வோருடன் நாங்கள் இணைந்து பயணம் செய்து வருகிறோம். யாரும் இங்கு வரலாம். வாழலாம். நடிக்கலாம். முதல்வராக இருந்து அதிகாரம் செய்ய வேண்டாம். அடிமையாக நாங்கள் இருக்க விரும்பவில்லை. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தில் போய் அரசியல் கட்சியை ரஜினி தொடங்கிக் கொள்ளட்டும். இதனை ரஜினிக்கு மட்டும் சொல்லவில்லை. இதுபோல் எண்ணம் இருக்கும் அனைவருக்கும் விடுக்கும் எச்சரிக்கை என்று சீமான் கூறியுள்ளார்.