அடிக்கடி பதவியேற்பு விழா நடந்தால் அதிமுக ஆட்சி.. பாராட்டு விழா நடந்தால் திமுக ஆட்சி: சீமான் சீற்றம்
நெல்லை: 5 ஆண்டுகளில் அமைச்சர்களை மாற்றி மாற்றி நாட்டை கெடுப்பார் ஜெயலலிதா, 5 ஆண்டுகளில் அமைச்சர்களை மாற்றாமல் கெடுப்பார் கருணாநிதி. இது தான் அதிமுக மற்றும் திமுக ஆட்சி இடையிலான வேற்றுமை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்வண்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
இந்த தேர்தல் பண நாயக்கத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் போர். பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி பதவியேற்பு விழா நடந்தால் அது அதிமுக ஆட்சி. அடிக்கடி பாராட்டு விழா நடந்தால் அது திமுக ஆட்சி. இது தான் இரண்டு ஆட்சிகளுக்கும் இடையேயான வேறுபாடு.
இந்த அம்மா 5 ஆண்டுகளில் அமைச்சர்களை மாற்றி மாற்றி நாட்டை கெடுப்பார், இந்த ஐயா 5 ஆண்டுகளில் மாற்றாமல் கெடுப்பார் என்றார்.