தமிழகத்தில் மக்கள்புரட்சி வெடிக்கும்- பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சீமான் எச்சரிக்கை
பேருந்து கட்டண உயர்வு ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூர செயல் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பேருந்து கட்டணஉயர்வு ஏழைமக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூர செயல்என தெரிவித்துள்ள சீமான், அதனை திரும்பபெறாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் பாதிக்கு பாதி உயர்த்தியிருப்பது மக்களின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளதாக சீமான் கூறியுள்ளார்.
கொடுங்கோல் ஆட்சி…
அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தியிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பானது மக்கள் நலனென்பது துளியுமற்ற கொடுங்கோல் ஆட்சியின் கோரச்செயலாகும். தங்களது ஊழல்மய ஆட்சியினாலும், நிர்வாகச் சீர்கேட்டினாலும் நிகழ்ந்த இழப்புகளை ஈடுகட்ட மக்களைப் பலிகடாவாக்கியிருக்கும் கையாலாகத்தனம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் தலையில் பேரிடி..
இந்த அறிவிப்பின் மூலமாக அடித்தட்டு உழைக்கும் மக்களும், அன்றாடங்காய்ச்சிகளும், ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்களும் கண்டிப்பாக மிக மோசமாகப் பாதிப்படைவார்கள் என்றும் சீமான் கூறியுள்ளார். மத்திய அரசின் தவறானப் பொருளாதாரக் கொள்கையாலும், மோசமானப் பொருளாதார நடவடிக்கைகளாலும் விலைவாசி உயர்வும், பணவீக்கமும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற சூழலில் தமிழக அரசிடமிருந்து வந்திருக்கிற இக்கட்டண உயர்வறிப்பானது மக்களின் தலையில் இறங்கியிருக்கிறப் பேரிடியாகும்.
50 சதவீத கட்டணஉயர்வு
தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகங்கள் மூலம் 22,509 பேருந்துகள் மாநிலம் முழுக்க இயங்கி வருகின்றன. இதன்மூலம் நாளொன்றுக்கு ஏறழத்தாழ 2.02 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இவற்றுள் மிகப்பெரும்பான்மை மக்களும், அமைப்புசாராத் தொழிலாளர்களும் பேருந்துவழிப் பயணத்தையே முழுமையாக நம்பியிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் 50 விழுக்காட்டுக்கு மேலான கட்டண உயர்வால் அவர்களின் வருமானத்தில் ஒருபங்கை பேருந்துப் பயணத்திற்காகவே செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இக்கட்டண உயர்வுக்கு எரிபொருள் விலையுயர்வைக் காரணம் காட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
எரிபொருள் தான் காரணமா..?
சர்வதேசச் சந்தையில் கச்சாஎண்ணெயின் விலைகடும் வீழ்ச்சியினைச் சந்தித்தாலும் அதன் பயன்மக்களைச் சென்றுசேரவிடாது தடுக்கிறவண்ணம் மத்திய அரசோடு, மாநில அரசும் அதிகப்படியான வரியினை விதித்து எரிபொருள் விலையினை ஏற்றியிருக்கிறது. ஆகையினால், எரிபொருள் செலவினைக் காரணம் காட்டி பேருந்துக்கட்டண உயர்வை சரியென்று நிறுவ முற்படுவது சிறுபிள்ளைத்தனமானது.
நிர்வாக திறமையின்மையே காரணம்
நிர்வாகத் திறமையின்மையும், அதில்நிகழ்ந்த முறைகேடுகளுமே போக்குவரத்துக் கழகத்தை மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்பது வெளிப்படையாகும். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவோடு தமிழகத்தை ஒப்பிட்டு பேருந்துக்கட்டண உயர்வை சரியென்று வாதிடுவது பொருளற்ற வாதமாகும். அண்டை மாநிலங்களின் பொருளியல் நிலையும், வாழ்வியல் சூழலும் வெவ்வேறு அடுக்கில் இருக்க அதனைச் சமதளத்தில் நிறுத்தி நியாயம் கற்பிக்க முயல்வது அபத்தமானது.
மக்கள் புரட்சி வெடிக்கும்...
ஆடம்பர விழாக்களினாலும், தேவையற்ற செலவினங்களினாலும் அரசின் நிதியிருப்பைக் காலிசெய்துவிட்டு அதனை ஈடுகட்ட மக்களின் தலையில் சுமையை ஏற்றுவதை எந்தவகையிலும் ஏற்கமுடியாது என்றும் அதனை நாம் தமிழர் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களுக்கு எதிரான இப்பேருந்து கட்டண உயர்வினை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் இல்லையென்றால், மக்கள் புரட்சி மண்ணில் வெடிக்கும் என சீமான் அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.