உரிமைகள் பறிபோவதாலேயே பிரதமருக்கு எதிராக போராட்டம்... கறுப்புக்கொடியுடன் சீமான் கைது!
தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதால் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதால் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தை கறுப்புக்கொடியுடன் முற்றுகையிட முயன்ற போது சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையம் அருகே போராட்டத்தின் போது சீமான் கூறியதாவது : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களின் உரிமை தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட போது அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ச்சியாக தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது. ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை தமிழர்களுக்குத் தந்து இந்த நிலத்தை நஞ்சாக்குகின்ற நாசகார செயலைத் தான் செய்கிறது மத்திய அரசு.
மத்திய அரசின் முதன்மை அமைச்சர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு நாங்கள் திட்டமிட்டபடி எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இது எங்களின் மனநிலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வும் இது தான். கைது செய்யமாட்டார்கள், சிறை செல்லமாட்டார்கள் என்றால் அனைவருமே வீதிக்கு வந்திருப்பார்கள் அது தான் உண்மை.
இவ்வளவு பிரச்னைக்கு இடையே இங்கு ராணுவ தளவாட முகாம் நடத்த என்ன அவசியம் இருக்கிறது. கடலில் நாங்கள் உயிருக்குப் போராடிய போது இந்த கடற்படை வந்து எங்களை காப்பாற்றியதா, குரங்கணியில் தீப்பிடித்து எறிந்த போது அதனை அணைக்க நடவடிக்கை எடுத்ததா?
மழை, வெள்ளத்தில் தத்தளித்த போது காப்பாற்ற வந்தார்களா. எதற்காக இந்த ராணுவ கண்காட்சி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை அச்சுறுத்துவதற்காக ராணுவம் கண்காட்சி நடக்கிறது. இங்கு நடைபெறும் வளக்கொள்ளையை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம், இதனால் பிரதமர் வருகையை நாங்கள் கண்டிக்கிறோம்.
மத்திய அரசுடன் அனுசரணையாக இருந்தால் தான் சலுகை கிடைக்கும் என்றால் அது என்ன ஆட்சி முறை. இது ஜனநாயக ஆட்சி முறையல்ல, பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு நிதி கிடையாது என்றால் இது என்ன ஆட்சி முறை. இது தான் ஒரே நாடு ஒரே வரி ஒரே சட்டமா. இங்கு இருக்கும் முதல்வர் வரவேற்கத்தான் செய்வார்கள், ஏனெனில் இங்கு பாஜகவின் ஆட்சி தான் நடக்கிறது.
பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்த ஒன்றுகூடுவோம் என்று முன்கூட்டியே கைது செய்துவிட்டனர். நாங்களே தலைமறைவாக இருந்து ஒளிந்து மறைந்து தான் போராட்டம் நடத்த வந்துள்ளோம். அச்சம் காரணமாக ஒவ்வொருவராக கைது செய்கின்றனர், போராட அனுமதி கேட்டால் கிடைக்காது எனினும் பல தடைகளைக் கடந்து தான் நாங்கள் போராடி வருகிறோம் என்றும் சீமான் தெரிவித்தார். இதனையடுத்து பிரதமருக்கு எதிராக விமான நிலையத்தை கருப்புக்கொடியுடன் முற்றுகையிட முயன்ற சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.