சீமானே அதிக நேரம் பேசுவதா? வன்மத்தை டிவி விவாதத்தில் கொட்டிய பாஜக கே.டி ராகவன்
சென்னை: நாம் தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர், மற்றும் பாஜக மாநில ஊடகப் பிரிவுச் செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் டிவி விவாத நிகழ்ச்சியில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்து தந்தி டிவியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சீமான், கே.டி.ராகவன் உள்ளிட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விவாதத்தின்போது சீமான் அரங்கத்தில் இல்லை. காணொலி காட்சி மூலமாகவே அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.
வாக்குவாதம்
சீமான் தமது கருத்துகளை முன்வைத்துக் கொண்டே வந்தார். இடையிடையே ராகவன் குறுக்குசால் ஓட்டினார். சிலநேரங்களில் பாஜகவுக்கே உரித்தான வெறுப்பரசியலை வெளிப்படுத்தும் விதமாகவும் ராகவன் வன்மமாக கேள்விகளை எழுப்பினார். "நீங்களும்தான் கட்சி வைத்துள்ளீர்கள் உங்களை மக்கள் ஆதரித்தார்களா" என எகத்தாளமாக கேள்வி எழுப்பினார் ராகவன்.
ஒருமையில் அழைத்தார்
அப்போது சீமான் இடைமறித்து, ஹேய், நீயும் வா, நாளைக்கு உன்னை ஆதரிப்பானா இல்லையா என்பது அப்புறம்.. என்றார். அப்போது ராகவன் இடை மறித்தார். திரு.சீமான் அவர்களே, மரியாதையா பேசுங்க. நீ, வா, போன்னு பேசக்கூடாது. மரியாதையா பேசுங்க என சீமானை பேசவிடாமல் திசை திருப்ப முயன்றார் ராகவன்.
சினிமாவால்தான் வந்தீர்கள்
மேலும் நீங்க பேசிக்கிட்டே இருக்கீங்க என அவருக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி கொந்தளித்தார். மேலும் அரசியல்சாசனத்தை எரிப்போம், தூக்கிப்போடுவோம் என்பதையெல்லாம் ஏற்க முடியாது. வெறும் சீமான் என்றால் யாருக்கு தெரியும்? சினிமாவில் இயக்குநராக இருந்துதானே வந்தீர்கள். நீங்க தமிழர்தானே, நின்னீங்களே எவ்வளவு ஓட்டுபோட்டார்கள். தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்களா? அப்புறம் என்ன பேச்சு என எரிந்து விழுந்தார் ராகவன்.
நான் போராளி
சீமான் பதிலுக்கு பேசுகையில், எனக்கு ஒரு ஓட்டு விழுது, விழலை. அது பேச்சு கிடையாது. நான் கேட்பதற்கு பதில் சொல். நான் போராடி ஒரு வருடம் சிறையில் இருந்துள்ளேன். இந்த மக்களுக்காக 20 வருடங்களாக களத்தில் நின்று, தினம் பேசிப்பேசி, போராடிக்கொண்டுள்ளேன் என்றார்.
அங்கீகாரம் தரவில்லை
ராகவன் கூறுகையில், தமிழக மக்கள் உங்களை அங்கீகரிக்கவில்லை. வெறும் சீமானாகவா வந்தீர்கள். இயக்குநராக இருந்து அரசியலுக்கு வந்தீர்கள். எந்த தமிழர்களுகு்காக பேசினீர்களோ, அந்த தமிழர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கையே இல்லை. பிறகென்ன? என்றார்.
தொகுப்பாளருடன் பஞ்சாயத்து..
பின்னர் தொகுப்பாளராக இருந்தவருடன் ராகவன் மல்லுக்கட்டத் தொடங்கினார். சீமானுக்கு மட்டும் ஏன் இவ்வளவு நேரம் ஒதுக்கனும்? என எகிறினார். சீமான் வெளியே செல்ல இருக்கிறார். அவர் பேசி முடித்துவிட்டு கிளம்புவார்... நீங்களும் இடை இடையே வாதம் செய்து கொண்டேதான் இருக்கீங்க என பதில் தந்தார் தொகுப்பாளர். சீமானுக்கு கொடுத்தது போல எனக்கும் அரை மணிநேரம் தாங்க எனவும் அடம்பிடித்தார் ராகவன்.
பின்னர் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.