ஈழத்துக்காக ஜெயலலிதாவுக்கு ஆதரவு சீமான் விளக்கம்
கோவை: ஈழத்துக்காக ஜெயலலிதாவை ஆதரிப்பதாக கூறினார் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி, அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறது. அக்கட்சிக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்துவருகிறார். சீமானின் முடிவுக்கு நாம் தமிழர் கட்சியிலுள்ள சில நிர்வாகிகளே எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வந்தன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கோவையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான் பேசினார். 'நாடாளுமன்ற தேர்தலும் நமது நிலைப்பாடும்' என்ற தலைப்பில் சீமான் பேசுகையில், அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கியது பாஜக என்பதால் அதை மதவாத கட்சியாக கருத முடியாது என்று விஜயகாந்த் பிரச்சாரம் செய்துவருகிறார். குஜராத் கலவரத்தால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவை போக்கிக்கொள்ள ராம்விலாஸ் பாஸ்வானும், சந்திரபாபுநாயுடுவும் இணைந்து முயற்சி எடுத்து அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கினார்கள். இதில் பாஜகவுக்கு பங்கு இல்லை.
இலங்கை நட்புநாடு:
ராஜபக்சே நமது நண்பர், இந்தியாவுக்கு இலங்கை நட்புநாடு என்று காங்கிரஸ் கூறிவருகிறது. பாஜகவும் இலங்கையை நட்புநாடு என்றுதான் கூறிவருகிறது. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ, இலங்கை எதிரிநாடு என்று அறிவிக்கப்பட வேண்டும் என்கிறார். போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்கிறார் ஜெயலலிதா. கச்சத்தீவை திரும்ப கேட்க முடியாது என்று காங்கிரசை போலவே பாஜகவும் கூறுகிறது. அதை திரும்ப பெற வேண்டும் என்பது ஜெயலலிதாவின் நிலைப்பாடாக உள்ளது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் ஜெயலலிதா. இலங்கை ஒரே நாடாக நீடிக்க முடியாது.
தமிழர்களுக்கான நாடாக ஈழம் உதயமாக வேண்டும், அதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்ட ஒரே தலைவர் ஜெயலலிதாதான் என்பதால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன். முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க உத்தரவிட்டவருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்யலாமா என சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. தீர்ப்பை தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்படும். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களின் தண்டனையை குறைத்த ஜெயலலிதாவுக்கு நான் ஆதரவு அளிப்பதில் தவறு இல்லை என்றார்.