தமிழக மீனவர் கொலை.. இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட சீமான் கைது
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் அட்டூழியக் கொலைகளைக் கண்டித்து இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட சீமான் கைது செய்யப்பட்டார்.
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட சீமான் கைது செய்யப்பட்டார்.
தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன் என்ற மீனவர் காயம் அடைந்தார்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பிரிட்ஜோவை சுட்ட இலங்கை கடற்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 7 நாள்களாக தங்கச்சிமடத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையின் அட்டூழியத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகினறனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை நாம் தமிழர் கட்சியினர் அதன் தலைவர் சீமான் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது மீனவர்கள் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், மீனவர்களை பாதுகாக்கக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் எல்லை தாண்டும் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கூட கொலை செய்யாமல் கைது செய்யும் நிலையில் இலங்கையின் அட்டூழியம் கண்டிக்கத்தக்கது என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
இதைத் தொடர்நது சீமான் உள்ளிட்ட கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.