8 வழி சாலை வேக பயணத்திற்கு அல்ல.. வேகமான மரணத்திற்கு... சீமான் பாய்ச்சல்
8 வழிச் சாலை என்பது வேகப் பயணம் அல்ல, அது வேகமான மரணம் என்று சீமான் கூறியுள்ளார்.
Recommended Video
சேலம்: 8 வழிச் சாலை என்பது வேகப் பயணம் அல்ல, அது வேகமான மரணம் என்றும், 8 வழிச்சாலை போன்ற ஒப்பந்தங்களின் மூலம் பணத்தை குவிக்க பார்க்கிறார்கள் என்றும் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை சந்திக்க சென்றார் அப்போது அவரை மல்லூர் போலீசார் கைது செய்தனர் அவருடன் வந்த 10 பேரையும் மல்லூர் போலீசார் கைது செய்து நள்ளிரவு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சீமான் உட்பட 11 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் சீமான். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது சீமான் கூறியதாவது:
சிறைபிடித்தது தேவைதானா?
அரசு மக்களிடம் கருத்து கேட்பது போல்தான் தாங்களும் கருத்து கேட்டோம். 90 சதவீத இடத்தினை மக்களிடமிருந்து அரசு வாங்கிக் கொண்டபின் நாங்கள் மக்களை சந்திப்பதில், அரசுக்கு என்ன பிரச்சனை இருக்கும்? அப்படி நாங்கள் குறைகளை கேட்கும்போது எங்களை அங்கேயே பொதுமக்கள் முன்னிலையை வைத்து கைதும் செய்கிறார்கள். இவ்வாறு என்னை கைது செய்ததன் மூலம் பொதுமக்களுக்கு மறைமுக அச்சுறுத்தலை அரசு ஏற்படுத்துகிறது. நேற்று சிறைபிடித்து இன்று விடுவிப்பது தேவைதானா? இது அவசியமற்றது. என்னை கைது செய்தது காரணமற்றது.
குரல்வளையை நெரிப்பதா?
8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைதுதானா? இதைப்பற்றி பேசினாலே குரல்வளையை நெரிப்பதா? இதுவா ஜனநாயகம்? நீதிமன்றத்தில் வாதி-பிரதிவாதி, சட்டசபையில் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி என்பதுபோல், அரசு சாலையை போடுவோம் என்கிறது, பொதுமக்கள் வேண்டாம் என்கிறார்கள். அவ்வளவுதானே? அதற்காக எதிரான நடவடிக்கையை எடுப்பதா? விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக விளைநிலங்களை பறிப்பது மிகப்பெரிய கொடுமை.
யாராவது கேட்டார்களா?
எங்களுக்கு பயணிக்க பாதையே இல்லை, 8 வழி பாதை வேண்டும் என்றும் யாராவது அரசை கேட்டார்களா? எதற்காக இவ்வளவு அவசர அவசரமாக பாதையை போட வேண்டும்? ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டுத்தோல் விற்பனை செய்யும் ஒரு ஒப்பந்ததாரரிம் ஒரு இடத்திலேயே குவியலாக தங்கமும், கோடிக்கணக்கில் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதென்றால், அவருக்கு மற்ற இடத்தில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கும்?
எதற்கு இவ்வளவு ஆர்வம்?
ஒரு ஒப்பந்ததாரருக்கு இவ்வளவு பணம் குவிக்க முடிகிறது என்றால், எதற்காக இந்த சாலை போடுவதில் அரசு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த சாலை அமைப்பது குறித்து அரசு எங்களுக்கு வாதரீதியான பதிலை அரசு சொல்லட்டும். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லக்கூட இவ்வளவு சாலைகள் கிடையாது. ஏற்கனவே கிருஷ்ணகிரியில், 6 வழிச்சாலை, 4 வழிச்சாலை, தொடர்வழி, வான்வழி என பல்வேறு வகைகளில் சாலைகள் உள்ளன. இதைதவிர இப்போது எதற்கு சேலத்திற்கும்-சென்னைக்கும் 8 வழிச்சாலை?
என் வளம் கொள்ளை போகிறதே
தமிழகத்தில் பெரும்பாலான சாலைகள், தரமில்லாமல் உள்ளது. ஆனால் 8 வழிச்சாலைக்கு முனைப்பு காட்டுகின்றனர். அந்நிய நாட்டுக்காரன் தமிழ்நாட்டுக்கு எதற்காக வருகிறான்?அவங்க நாட்டிலேயே தொழில் தொடங்க வேண்டியதுதானே? என் இளைஞருக்கு வேலை கொடுக்க இங்கே வருகிறானா? கிடையாது. அவர்கள் நாட்டின் வளங்களை பத்திரப்படுத்திக்கொண்டு என் நாட்டின் வளத்தை கொள்ளையடிக்க வருகிறான்.
நீர்-சோறு பற்றி சிந்திக்கவில்லை
10 ஆண்டுகளுக்கு பிறகு கார்களின் எண்ணிக்கை கூடும் என்று அரசு கூறுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகையும்தான் கூடும். காரை பற்றி சிந்திக்கும் அரசு மக்களுக்கு தேவையான நீரையும், சோறையும் பற்றி சிந்திக்கவில்லை. 8 வழிச்சாலைக்காக அரசு கடைபிடித்து வரும் அடக்குமுறையை சட்டப்போராட்டத்தின் மூலம் ஒடுக்குவோம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தூத்துக்குடி மற்றும் 8 வழிச்சாலை மக்களையும் சந்திப்பேன்.
இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.