ஜூன் 4 வரை சீமானை கைது செய்யக் கூடாது: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
ஜூன் 4 வரை சீமானை கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை: திருச்சியில் மதிமுக-நாம் தமிழர் மோதிக் கொண்ட விவகாரம் தொடர்பான வழக்கில், ஜூன் 4 வரை சீமானை கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நடைபெற்ற விழாவில் பங்கேற்க கடந்த 19-ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகிய இருவரும் சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரே விமானத்தில் வந்தனர்.
அப்போது, இவர்கள் இருவரையும் வரவேற்க இரு அணியின் தொண்டர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். இரு கட்சி தொண்டர்களிடம் சமீப காலமாக மோதல் இருந்துவரும் நிலையில், அன்றைய தினம் நேருக்கு நேர் சந்திப்பின்போது மீண்டும் மோதல் ஏற்பட்டது. இரு கட்சி தொண்டர்களும் வாழ்த்து கோஷம் எழுப்பும்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கத்தினர்.
இதனால் இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் அதுவே கைகலப்பாக மாறியது. இதைத்தொடர்ந்து ஒருவருக்கொருவர் கொடிக்கம்பத்தை கொண்டு சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பாக சீமான் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் மோதல் நடைபெற்றபோது தான் அந்த பகுதியிலேயே இல்லை என முன்ஜாமீன் கோரி சீமான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிமன்றம், ஜூன் 4 வரை சீமானை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சீமான் முன்ஜாமீன் மீதான விசாரணையை ஜூன் 4-க்கு ஒத்திவைத்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.