நடராஜன் மறைவிற்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல் தெரிவிக்காதது பண்பாடு அல்ல - சீமான்
ம. நடராஜன் மறைவிற்கு அரசியலைத் தாண்டி முதல்வரும், துணை முதல்வரும் இரங்கல் தெரிவித்திருக்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தஞ்சாவூர் : ம. நடராஜன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவிக்காதது பண்பாடற்ற செயல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அரசியலைத் தாண்டி ஒரு மொழிப் போராட்ட வாதிக்கு தமிழக முதல்வர் ஒரு இரங்கலை தெரிவித்திருக்கலாம்.
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 20ம் தேதி அதிகாலையில் காலமானார். சென்னை பெரும்பாக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அங்கு நடராஜனின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மாபெரும் இழப்பு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவின் கணவர் நடராஜனின் இறப்பு தமிழ் சமூகத்திற்கு மாபெரும் ஈடுகட்ட முடியாத இழப்பு. அவர் மரணத்தை விட பெரிய வலியைத் தருவது சசிகலா 2 நாளுக்கு முன்னர் சிறை விடுப்பில் வந்து பார்க்காதது.
எம்பிகள் கையெழுத்திடவில்லை
சசிகலா 2 நாட்கள் முன்பே வந்து பார்த்திருக்க முடியும் ஆனால் தமிழகத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட சசிகலாவின் பரோலில் கையெழுத்திடவில்லை. இதை நினைக்கும் போது மிகுந்த மனவலியைத் தருகின்றது.
ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்
மேலும் எதிர்க்கட்சித் தலைவரான மு.க ஸ்டாலின் கூட நடராஜன் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அரசியலைத் தாண்டி ஒரு மொழிப் போராட்ட வாதிக்கு தமிழக முதல்வர் ஒரு இரங்கலை தெரிவித்திருக்கலாம்.
நாகரீகமற்ற அரசியல்
இவ்வளவு பண்பாடற்ற, நாகரீகமற்ற அரசியலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நினைக்கும் போது உண்மையில் பெருத்த அவமானமாக உள்ளது. பயமாக உள்ளது பதவிக்காக எதையும் செய்யும் கூட்டத்தில் சிக்கிக் கொண்டோமோ எனும் ஐயம் எழுகின்றது. மதிப்பு மிக்க ஆளுமைக்கு எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.