களத்திற்கே வந்து போராடாமல் கருத்து சொல்லும் ரஜினி... சீமான் சுளீர்!
களத்திற்கு வந்து வியர்வை சிந்தி நாக்கு வறண்டு போக குரல் எழுப்பி போராடாத ரஜினி உண்மை என்னவென்று தெரியாமல் வன்முறை என்று சொல்வதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை : களத்திற்கு வந்து வியர்வை சிந்தி நாக்கு வறண்டு போக குரல் எழுப்பி போராடாத ரஜினி உண்மை என்னவென்று தெரியாமல் வன்முறை என்று சொல்வதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறை சீருடையில் நடந்த வன்முறைகளின் போதெல்லாம் ரஜினி எங்கே போயிருந்தார், பொழுதுபோகவில்லை என்பதற்காக ட்விட் போடக்கூடாது, வேண்டுமானால் இமயமலைக்கு போய் சுற்றிவிட்டு வாருங்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று ஐபிஎல் போட்டிக்கு தடை கேட்டு நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : போராட்டத்தின் போது நான் தாக்குவதை ரஜினி வந்து நேரில் பார்த்தாரா. நீங்கள் பார்த்த காணொளிகளில் நான் காவலர்களை தாக்கும் காட்சிகள் இருக்கிறதா, நான் விலக்கித் தான் விடுகிறேன். காவலர்கள் தான் வெற்றிமாறன், களஞ்சியத்தை தாக்கினார்கள், களஞ்சியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
150க்கும் மேற்பட்ட இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் அறவழியில் போராட்டம் நடத்த அனுமதி கொடுத்தனர் ஆனால் நாங்கள் சென்று கொண்டிருக்கும் போதே காவலர்கள் தாக்கினர். கட்சியினர் வந்து தாங்கள் தாக்கப்படுவதாக சொன்னதையடுத்து தான் நான் அங்கு சென்றேனே. ஏன் அடிக்கிறீர்கள் என்று தான் நான் கேட்டேன்.
போலீஸ் வன்முறைக்கு கண்டனமில்லையே
நான் போன பிறகு தான் காவலர்கள் தாக்குதலையே குறைத்தனர். முழு காணொலியையும் போடாமல் நான் வன்முறையில் ஈடுபட்டேன் என்று பேசுவதெல்லாம் சரியில்லை. ஆந்திர காட்டிற்கு 20 பேரை காவல்துறையினர் சீருடையில் தானே சுட்டுக்கொன்றார்கள் அது வன்முறையில்லையா, மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதே போலீஸ் சீருடையில் வாகனங்களுக்கு தீ வைத்தனர். அந்த வன்முறையையெல்லாம் ஏன் ரஜினி கண்டிக்கவில்லை.
களத்திற்கு வந்தாரா ரஜினி
களத்தில் வந்து ரஜினி போராடினாரா. அவருடைய மன்றத்தினர் எப்படி போராட்டத்தில் ஈடுபட்டார்கள் தெரியுமா, ரஜினியின் படத்தை போட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அச்சிட்ட அட்டையை அவர்கள் மாட்டிக்கொண்டு நிற்கவில்லை மற்றவர்களுக்கு மாட்டிவிடுகின்றனர். இந்த வயதிலும் பாரதிராஜா போராட்ட களத்திற்கு வந்து போராடி கைது செய்யப்பட்டு 2 மணி வரை திடலில் படுத்திருந்துவிட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு சென்றோம்.
பத்திரிக்கையாளர்களை அழைத்து சொல்லுங்கள்
களத்திற்கே வந்து நீங்கள் போராடவில்லை, வியர்வையுடன் போராடி இருக்கிறீர்களா, தாகம் எடுத்து கத்தி இருக்கிறீர்களா? எதுவும் செய்யாமல் ஒரு ட்விட் மட்டும் போட்டிருக்கிறார். பத்திரிக்கையாளர்களை சந்தித்து நாங்கள் செய்தது தவறு என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
காவிரி பற்றி தெரியாது
தாக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்திருந்தால் விளையாட்டு மைதானத்திற்குள்ளேயே போயிருக்க மாட்டோம். தாக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமே கிடையாது. ரஜினிக்கு காவிரி என்றாலே என்னவென்று தெரியவில்லை. வீட்டு வாசலில் நின்று கொண்டு மனதில் தோன்றியதை பேசுகிறார்.
இமயமலைக்கு போய் சுற்றுங்கள்
எத்தனை மாவட்டத்தின் குடிநீர் காவிரி எத்தனை லட்சம் ஏக்கருக்கு பாசனம் தருகிறது காவிரி. இது எதுவுமே தெரியாமல் ட்விட் போடக் கூடாது. பொழுதுபோகவில்லை என்றால் இமயமலைக்கு போய் சுற்றிவிட்டு வரவேண்டும். கொதித்து போய் இருக்கும் எங்களிடம் வந்து இப்படி பேசக்கூடாது, எதுவாக இருந்தாலும் களத்திற்கு வந்துவிட்டு பேசுங்கள் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.