கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடினால் சிறையில் போடுவீர்களா.. சீமான் ‘பொளேர்’
கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடினால் சிறையில் போடுவீர்களா? மக்களை கொன்றுவிட்டு எதை நிர்வாகம் செய்யப் போகிறீர்கள் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: கதிராமங்கலம் மக்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
கதிராமங்கலத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
போராட்டத்தில் பங்கேற்ற சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பஞ்சபிரதேசம்
மீத்தேன் எடுத்த மற்ற நாடுகளில் உள்ள கிணறுகள் இதுவரை எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை அணைக்க முடியவில்லை. இது போன்றுதான் இங்கேயும் நடக்கப் போகிறது. மீத்தேன் எடுக்கிறோம் என்று சொல்லிதான் பல நாடுகள் இன்று பஞ்ச பிரதேசமாக மாறியிருக்கிறது.
வாழ்விடங்கள் நாசம்
மக்களின் வாழ்விடங்களை எல்லாம் நாசமாக்கிவிட்டு எண்ணெய் கிணறுகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறது அரசு. மக்களை கொன்ற பின் நிர்வாகத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள். போராடுகிற மக்களை அடித்து ஒடுக்குவது, சிறைபடுத்துவது, வழக்குகளை போட்டு அச்சுறுத்துவது என்பதைக் கண்டித்துத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தண்ணீர் மஞ்சலானது எப்படி?
மீத்தேன், இயற்கை வாயு எல்லாம் ஒன்றுதான். தண்ணீர் மஞ்சலாக மாறியதற்கு காரணம் என்ன? எந்த விஞ்ஞானி வந்து இதை நிரூபிக்க போகிறார்? தேனாக இனித்துக் கொண்டிருந்த இந்த பூமியில் தண்ணீர் ஏன் மஞ்சலாகியது? என் நிலத்தில் இருந்து எடுக்கும் தண்ணியை நான் குடிக்க முடியாது, சமைக்க முடியாது என்றால் என்ன அர்த்தம்? ஏன் இந்த நிலை உருவானது. எரிவாயு எடுத்ததால் தானே இந்த நிலை?
மக்களை அடித்து விரட்டும் அரசு
நெடுவாசல், ஜல்லிக்கட்டு என போராடும் மக்களை அடித்து கலைக்கிறது அரசு. போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர அரசின் வழிமுறை இதுதான். போராடும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது, தடியடி நடத்தி சித்திரவதை செய்வது, சிறையில் போடுவது ஆட்சியாளர்களின் வேலையாக இருக்கிறது.
சினிமாவை காப்பாற்ற வேண்டும்
ஏற்கனவே சினிமா கட்டணங்கள் அதிகமாக இருப்பதால்தான் திருட்டு விசிடி அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. ஜிஎஸ்டியால் அது இன்னும் அதிகரிக்கும். ஆக, ஒரு தொழிலை காக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்பது புரிகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் சினிமா தொழிலை காப்பாற்ற வேண்டும் என்று சீமான் கூறினார்.