லோக்சபா தேர்தல்- 3வது அணியை ஆதரித்து பிரசாரம்: சீமான்
கோபி: லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணியை ஆதரித்து பிரசாரம் செய்வோம் என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்தோம். வருகிற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைய போகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ய போவதில்லை.
அரசியலில் ஜாதி, மதம் இருக்கக்கூடாது. அதனால் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஆட்சிக்கு வரக்கூடாது. வருகிற தேர்தலில் 3-வது அணி உருவானால் அதை வரவேற்று பிரசாரம் செய்வோம்.
ஆம் ஆத்மி கட்சியும் தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்தும் ஊழலை எதிர்ப்போம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அந்த கட்சிகளுக்குள் பல பிரச்சினைகள் உள்ளன. ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.
இவ்வாறு சீமான் கூறினார்.