ஹைகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்.. சீமான் எச்சரிக்கை!
ஹைகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஹைகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.
ஹைகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்கக்கோரி மதுரை காளவாசல் சந்திப்பில் தமிழ் போராட்டக்குழு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
5-வது நாளான இன்று நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உத்தரபிரதேசம், பீகார், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள், வழக்கு மொழிகளாக உள்ளதாக கூறினார்.
ஆனால் தமிழகத்தில் மட்டும் அத்தகைய நிலை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர் இல்லையெனில் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்தார்.