இலங்கை மீதான போர்க்குற்றம்: கொலைகாரனை வைத்துக்கொண்டே விசாரிப்பதா? சீமான் கேள்வி
சென்னை: இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை குறித்து அந்த நாடு தலைமை பதவி வகிக்கும் காமன்வெல்த் அமைப்பிலுள்ள நாடுகள் விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. கொலைகாரனே விசாரணையின்போது கூட இருந்து விசாரித்தால் அந்த விசாரணை எப்படி நீதியை பெற்றுத்தரும் என்று 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
இலங்கை மீதான போர்க்குற்றம் குறித்து, காமன்வெல்த் (பொதுநலவாய்) அமைப்பிலுள்ள நாடுகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த் அமைப்பின் இவ்வாண்டுக்கான தலைவராக இலங்கை செயல்பட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: இலங்கையின் மீது தலையீடற்ற ஒரு பன்னாட்டு விசாரணையைத்தான் சர்வதேசச் சமூகத்திடம் நாம் கோருகிறோம். ஆனால், பொதுநலவாய் அமைப்பிலுள்ள நாடுகள்தான் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையைச் செய்யும் என்கிறார்கள்.
பொதுநலவாய் அமைப்பின் தலைவராகவே இலங்கை இருக்கிறபோது அந்த அமைப்பிலுள்ள நாடுகள் இலங்கையை எப்படி குற்றப்படுத்தும்? இந்த விசாரணை எப்படி நேர்மையாக இருக்கும்? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. கொலைசெய்த கொலைகாரனே விசாரணையின்போது கூடவே இருந்து விசாரிப்பான் என்றால், அந்த விசாரணை எப்படி நீதியைப் பெற்றுத் தரும்? என கூறியுள்ளார்.