சீரக சம்பா அரிசிக்கு விரைவில் புவிசார் குறியீடு.. அறிவுசார் சொத்துரிமைக் கழகம் அறிவிப்பு
தமிழகத்தில் விளைவிக்கப்படும் சீரக சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைக்க உள்ளதாக அறிவுசார் சொத்துரிமைக் கழகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் விளைவிக்கப்படும் சீரக சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைக்க உள்ளதாக அறிவுசார் சொத்துரிமைக் கழகம் தெரிவித்துள்ளது.
அரசி வகைகளின் தாய் என்று அழைக்கப்படும் சீரக சம்பா அரிசிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. இது குறித்து மத்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை கழக தலைவர் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், பல ஆராய்ச்சி கட்டுரைகளின் படி சீரக சம்பா அரிசிக்கு புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தியும், சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் சக்தியும் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அரிசி தமிழகம் முழுக்க விளைவிக்கப்படுகிறது. பாட்டி வைத்தியங்கள் போன்ற பழமையான வைத்தியங்கள், சொத்துக்கள் எல்லாம் அறிவுசார் குறியீட்டில் பாதுகாக்கப்படும்.
அதேபோல் தற்போது சீரக சம்பா அரிசிக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. இதன்மூலம் தஞ்சை, நெல்லையில் விளைவிக்கப்படும் இந்த அரிசிக்கு தனி மரியாதை கிடைக்க உள்ளது என்றுள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சொந்தமானதை பிற பகுதியினர் உரிமை கொண்டாட கூடாது என்பதற்காக இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டது.
சீரக சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைப்பதால், பல நன்மைகள் நடக்கும். இனி இந்த அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது. அதேபோல் வேறு மாநிலங்களில் விளைய வைக்கவும் கூடாது. தமிழகத்தில் இருந்து மட்டுமே எல்லோரும் வாங்க முடியும்.
இதனால் இந்த அரிசிக்கான தேவை அதிகமாகும். இது விவசாயிகளுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.