புதிய விமான நிலையத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு.. செய்யூர் மக்கள் ஆட்சியரிடம் மீண்டும் மனு
செய்யூர் கிராம மக்கள் 2-வது முறையாக மனு அளித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: புதிய விமான நிலையத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து செய்யூர் கிராம மக்கள், காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் இரண்டாவது முறையாக மனு அளித்துள்ளனர்.
விமானங்களின் எண்ணிக்கை, சரக்கு சேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால், கூடுதலாக புதிய விமான நிலையம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில், விமான நிலையங்களின் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது
அதன்படி, மீனம்பாக்கம் அருகேயுள்ள அனகாபுத்துார் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டது. பிறகு, பொதுமக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது.
இந்நிலையில், சென்னையிலிருந்து, 100 கி.மீ.,யில் இருக்கும், செய்யூர் தாலுகாவில், அரப்பேடு, தொழுப்பேடு போன்ற கிராமங்கள் மத்தியில், 2,000 ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைய இருப்பதாக, தகவல்கள் கசிய தொடங்கியது. இதனால் புதிய விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கப்பட்டுவிடும் என்று செய்யூர் பகுதி மக்கள் அச்சப்பட்டனர்.
இதனால் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தங்களது நிலம் எடுக்க கூடாது என மனு கொடுத்த கிராம மக்கள், இன்று இரண்டாவது முறையாகவும், மனு கொடுத்துள்ளனர். 2000 ஏக்கர் தங்களது நிலத்தினை அரசு கையகப்படுத்திட கூடாது என அந்த மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.