சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சேகர் ரெட்டி உள்பட 3 பேரின் போலீஸ் காவல் ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஓபிஎஸ் கூட்டாளியான சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவரின் போலீஸ் காவல் ஏப்ரல் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள சேகர்ரெட்டி, பிரேம்குமார், ஸ்ரீனிவாசலு ஆகியோரின்
போலீஸ் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராயர் நகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்த இவரது வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது, ஏராளமான புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுக்கள், கட்டிக்கட்டியாக தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் இவரது கூட்டாளிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சேகர் ரெட்டி மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் சிபிஐ போலீசார் மற்றும் மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் மீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை மார்ச் 17-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சேகர் ரெட்டியை சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் விசாரிப்பதற்காக அமலாக்கப்பிரிவு போலீசார் மார்ச் 20ம் தேதி கைது செய்தனர். மேலும், அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களது போலீஸ் காவல் முடிந்ததால், வீடியோ கான்பிரன்சிங் மூலம் நீதிபதி முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, 3 பேரின் காவலையும் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது ஒருபுறம் இருக்க ஜாமீன் கோரி சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. முன்னதாக 3 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.