தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிபிஐ கோர்ட்
தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு மற்றும் பிரேம்குமார் உள்ளிட்ட மூவருக்கு சென்னை சி.பி.ஐ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை: சட்டவிரோதமாக பணம் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சேகர் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ. 136 கோடி பணமும், 179 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.34 கோடி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் அடங்கும்.
இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு, ஆடிட்டரும், நண்பருமான பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் ஜாமன் கோரி சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மற்ற மூவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்ற காவல் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் சிறைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு மீண்டும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். முக்கியமாக, அந்த மனுவில் தாங்கள் கைது செய்யப்பட்டு 88 நாள்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து சி.பி.ஐ நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. தினமும் காலை 10.30 மணிக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி முன்பு ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.